தமிழ்ப்படம் 2.0 படத்தில் கஸ்தூரி

சென்னை

டிகையை கேள்விகள் கேட்பது போல் நடிகர்களை யாராவது கேள்வி கேட்டதுண்டா என நடிகை கஸ்தூரி டிவிட்டரில்  பதிந்துள்ளார்.

முன்பு வெளியான தமிழ்படம் என்னும் பெயர் கொண்ட படத்தின் அடுத்த பாகம் தமிழ்ப்படம் 2.0 என்னும் பெயரில் வெளி வர உள்ளது.  மிர்ச்சி சிவா உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்தப்  படத்தை முதல் பாகத்தை இயக்கிய அமுதன் இயக்குகிறார்.   இந்தப் படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

இந்தப் படத்தில் நடிகை கஸ்தூரி ஒரு குத்துப் பாடலுக்கு நடனமாடி உள்ளதாக கூறப்படுகிறது.   ஒரு ரசிகர் கஸ்தூரியின் டிவிட்டர் பக்கத்தில், தாயான ஒரு பெண் இவ்வாறு குத்துப் பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடுவது சரியா என கேள்வி எழுப்பி உள்ளார்.

இதற்கு நடிகை கஸ்தூரி, “ஒரு பெண் கவர்ச்சியாக நடித்தால் அவள் புத்திசாலி அல்ல, தாயாக இருக்க தகுதி அற்றவள்,  சரியான நோக்கம் இருக்காது என நினைக்கும் தமிழ் பொது புத்தி மாற வேண்டும் என நான் ஆசைப்படுகிறேன்.   யாராவது ஒரு திருமணமாகி குழந்தைகள் உள்ள  நடிகரைப் பார்த்து நீங்கள் ஏன் மது அருந்துவது போல் நடிக்கிறீர்கள்?  ஏன் குத்துப் பாடலுக்கு நடனம் ஆடுகிறீர்கள்?  ஏன் நெருக்கமான காதல் காட்சிகளில் நடிக்கிறீர்கள் என கேட்டது உண்டா?” என பதில் அளித்துள்ளார்.

இதற்கு அந்த ரசிகர் பதில் ஏதும் கூறவில்லை.