மேட்டுப்பாளையம்

நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட போது முதல்வர் பழனிச்சாமி வந்தாரா என திமுக தலைவர் மு க ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்

வரும் 6 ஆம் தேதி நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி மாநிலம் எங்கும் தீவிர தேர்தல் பிரசாரம் நடைபெற்று வருகிறது.   அவ்வகையில் திமுக தலைவர் ஸ்டாலின் திமுக, காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்காகப் பிரசாரம் செய்து வருகிறார்.

அவ்வகையில் ஸ்டாலின் மேட்டுப்பாளையம் பேருந்து நிலைய பொதுக்கூட்டத்தில் “தேர்தல் பிரசாரத்துக்குத் தமிழக முதல்வர் பழனிச்சாமி ஹெலிகாப்டரில் வருகிறார். ஆனால் முதல்வர் நீலகிரியில் நிலச்சரிவு ஏற்பட்ட போது ஹெலிகாப்டரில் வந்து பார்வையிட்டாரா?.  ஆனால் நான் சென்று பார்வையிட்டேன்.  மேலும் திமுக சார்பில் ரூ.10 கோடி நிதி வழங்கப்பட்டது.

இப்போது ஒரு வாரக் காலமாக கருத்துக்கணிப்புகள் வந்து கொண்டிருக்கிறது.  அதை மெய்யாக்க திமுகவைப் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.  நான் முதல் முதலாகத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட போது 200 தொகுதிகளில் திமுக வெற்றி என எண்ணியிருந்தேன்.   தற்போது 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என நம்பிக்கை வந்துள்ளது.

தமிழக மக்களுக்கு நன்றாகத் தெரியும்.   அதிமுக அரசாங்கம் கொள்ளை அடித்த அரசாங்கம், ஊழல் செய்த அரசாங்கம், ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களைத் தாக்கிய அரசாங்கம், அரசு ஊழியர்கள் உள்பட அனைவரையும் போராட வைத்த அரசாங்கம் என நன்கு தெரியும்.

கடந்த  நாடாளுமன்றத் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது. அப்போது தமிழகம் முழுவதும் திமுக அலை அல்ல. திமுக சுனாமி வீசியது.   அப்போது ஒரே ஒரு அதிமுக எம்.பி ஓ.பன்னீர் செல்வம் மகன் மட்டுமே வெற்றி பெற்றார்.  ஆனால் அவர் பாஜக எம்பியாக செயல்படுகிறார்.

ஆகவே இந்த தேர்தலில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் கூட வெற்றி பெறக் கூடாது. அப்படி வெற்றி பெற்றால் அவர்கள் பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினராக செயல்படுவார்கள்.  தற்போதைய அதிமுக ஆட்சியில் விலை வாசி உயர்வு மிகவும் அதிகமாக அதிகரித்துள்ளது.  அதே வேளையில் விலை வாசிகளைக் கட்டுப்படுத்த தமிழகம் வளர்ச்சிக்கு திமுக தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது.

முன்பு நீலகிரி மாவட்டத்தில் இருந்த உருளைக்கிழங்கு ஆராய்ச்சி மையம் குஜராத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. அதை மீண்டும் நீலகிரி மாவட்டத்தில் அமைக்கப்படும்.   மேலும் குன்னூரில் அரசு கலைக் கல்லூரி, பச்சைத் தேயிலைக்கு ஆதார விலை, கட்டுமான வளர்ச்சிக்கு மாஸ்டர் திட்டம் தடை சட்டம் அமல்படுத்தப்படும்.

இங்குள்ள அரசு மருத்துவமனை  நவீனப்படுத்தப்படும். சுற்றுலா மேம்படுத்தப்படும். இது போன்று பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும்.  மேட்டுப்பாளையத்தில் வாழை ஆராய்ச்சி மையம், அரசு மருத்துவமனை நவீனப்படுத்தப்படும். மாநில உரிமைகளைக் காக்க, சுயமரியாதை காக்க திமுக வெற்றி பெற வேண்டும்  நீங்கள் திமுகவைப் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.” என உரையாற்றினார்.