சென்னை:

“முரசொலி” நாளிதழின் பவள விழாவில் பேசிய கமல், “முட்டாள்” என்று ரஜினியைத்தான் கூறினாரா என்ற சர்ச்சை சமூகவலைதளங்களில் நடந்துவருகிறது.

இன்று சென்னையில், “முரசொலி” நாளிதழின் பவளவிழா நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு கமல் பேசினார். ரஜினி, பார்வையாளராக மட்டும் கலந்துகொண்டார்.

முன்னதாக, இவ்விழாவில் ரஜினியும் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. பிறகு ரஜினி இந்த விழாவுக்கே வரமாட்டார் என்று ஒரு யூகச் செய்தி உலவியது.

இந்த நிலையில் இன்று பார்வையாளராக இவ்விழாவில் ரஜினி கலந்துகொண்டார்.

மேடையில் கமல் உரையாற்றினார். அப்போது அவர், “இந்த விழாவில் ரஜினி பேசுகிறாரா என்று கேட்டேன்.. இல்லை என்றார்கள்.. நானும் பேசவில்லை என்று சொல்லி அனுப்பிய பின் கண்ணாடியில் என் முகத்தைப் பார்த்து யோசிக்கும் போது ” அடே முட்டாளே, தற்காப்பு முக்கியமல்ல, தன்மானம்தான் முக்கியம், உன் கருத்தை கூற இந்த மேடையை தவிர வேறு எது இருக்க முடியும். பயந்து ஒதுங்காதே என்று எண்ணினேன், வந்துவிட்டேன் ”
என்று பேசினார்.

இதன் மூலம், நிகழ்ச்சியில் மேடையேறி பேசாத ரஜினியைத்தான் மறைமுகமாக “முட்டாள்” என்று கமல் கூறியதாக ஒரு சர்ச்சை சமூகவலைதளங்களில் எழுந்துள்ளது.

“மத்திய பாஜக அரசை பகைத்துக்கொண்டால் வருமானவரி ரெய்டு வரலாம் என்று அஞ்சியே ரஜினி, இக் கூட்டத்தில் பேசவில்லை. அதைத்தான் கமல் மறைமுகமாக விமர்சித்திருக்கிறார்” என்று நெட்டிசன்கள் பலர் கருத்துக்களைப் பதிவிட்டு வருகிறார்கள்.