போபால்

போலி சாமியார் பட்டியலில் பாபா ராம்தேவ் பெயர் இடம் பெறாதது ஏமாற்றத்தை அளிப்பதாக திக் விஜய் சிங் கூறி உள்ளார்.

இந்துக்கள் மட கூட்டமைப்பு கடந்த ஞாயிறு அன்று போலிச்சாமியார்கள் பட்டியலை வெளியிட்டது.  அதில் பலாத்கார சாமியார் ராம்ரஹீம், ஆசாராம் பாபு, ராம்பால், ராதே மா உட்பட 14 சாமியார்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.  இந்த பட்டியல் நாட்டில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.

மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய பிரதேச முதல்வருமான திக்விஜய்சிங் இது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

அவர் கூறி உள்ளதாவது :

”இந்தப் பட்டியலில் ஏன் பாபா ராம்தேவ் பெயர் இடம் பெறவில்லை? அது எனக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.  பதஞ்சலி பொருட்கள் என்னும் பெயரில் பல போலி பொருட்களை பாபா ராம்தேவ் விற்பனை செய்து வருகிறார்.  அது ஏமாற்று வேலை ஆகும்.  நான் அந்த மட அமைப்பிடம் ஒரு கேள்வி கேட்கிறேன்.  மனு நீதிப்படி காவி அணிந்த சன்னியாசி ஒருவருக்கு வியாபாரம் செய்யும் உரிமை உள்ளதா என்பதே அந்தக் கேள்வி.  அந்தப் பட்டியலில் உடனடியாக பாபா ராம்தேவின் பெயரை சேர்க்க வேண்டும்.  இல்லையெனில் இந்த அமைப்பின் அதிகாரிகளையும் பாபா ராம்தேவி பணம் கொடுத்து சரிக்கட்டி விட்டார் என்னும் சந்தேகம் நிச்சயம் எழும்”  என தெரிவித்துள்ளார்.