டில்லி:

யங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வந்த ஒருவரை (பிரக்யா தாக்கூர்)  எம்.பி.யாக்கிய உங்களை நம்ப முடியாது என்று ராஜ்யசபாவில் உபா சட்டதிருத்த மசோதா மீதான விவாதத்தின்போது, காங்கிரஸ் மூத்த தலைவர்  திக்விஜய்சிங் கடுமையாக சாடினார்.

உபா சட்டம் (UAPA) சட்டத்தில் மத்தியஅரசு திருத்தம் கொண்டு வந்துள்ளது. அதன்படி, தனிப்பட்ட ஒருவரை தீவிரவாதி அல்லது தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடையவர் என்று இந்த சட்டம் மூலம் கைது செய்து விசாரிக்க முடியும் என்ற ஷரத்து சேர்க்கப்பட்டு உள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சட்ட திருத்தம் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட மாநிலங்களவையில் தாக்கல் செய்யப் பட்டது. இதன்மீதான விவாதத்தின்மீது பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங், இந்த சட்டத் திருத்தத்திற்கு, காங்கிரஸ்  எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறினார். மேலும், இந்த சட்டத்தின்படி, . தனிநபரை இனி தீவிரவாதியாக அறிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.  மத்திய அரசு இந்த சட்டத்தை கொண்டு வருவதற்கான உள்நோக்கத்தை நாங்கள் சந்தேகிக்கிறோம்.

நாங்கள்  எப்போதுமே பயங்கரவாதிகள்  விஷயத்தில் சமரசம் செய்து கொண்டது இல்லை. ஆனால், பாஜக அவ்வாறு செய்துகொண்டுள்ளது. பயங்கரவாத செயலில் ஈடுபட்டவர் என்று குற்றம் சாட்டப்பட்டவருக்கு பாஜக தலைமை டிக்கெட் கொடுத்து போட்டியிடச் செய்து எம்பி யாக்கியுள்ளது. எனவே, இந்த சட்டத்தை நிலைக்குழு பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பிரக்யா சிங் தாக்கூர், தற்போது பாஜக எம்.பி.யாகி உள்ள நிலையில், அதை விமர்சிக்கும் வகையில் திக்விஜய்சிங் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

அதைத்தொடர்ந்து நடைபெற்ற வாக்கெடுப்பில், அதிமுக, திமுக உள்பட பல கட்சிகளின் ஆதரவுடன் ராஜ்யசபாவிலும் நிறைவேறியது.