திருவனந்தபுரம்

டிகை ஒருவர் கடத்தப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டதாக எழுந்த வழக்கில் சி பி ஐ விசாரணை தேவை என நடிகர் திலீப் கேட்டுக் கொண்டுள்ளார்

தமிழ் மற்றும் மலையாளத்தில் நடித்து புகழ் பெற்ற நடிகை ஒருவர் ஃபிப்ரவரி மாதம் 17ஆம் நாள் கடத்தப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டதாக ஒரு புகார் அளித்திருந்தார்.  அதையொட்டி பல்சர் சுனில் என்பவரும் அவர் கூட்டாளிகள் சிலரும் கைது செய்யப்பட்டனர்   அவர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் புகழ்பெற்ற மலையாள நடிகர் திலீப் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

தற்போது சிறையில் இருந்து ஜாமீனில் வெளி வந்துள்ள திலீப் இந்த வழக்கு குறித்து உள்துறை அமைச்சருக்கு விளக்கக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.  அந்த கடித்தத்தில் “கேரளா தலைமை காவல் அதிகாரி லோகநாத் பெஹரா மற்றும் டி ஜி பி சந்தியா ஆகியோர் தான் என்னை இந்த வழக்கில் தேவை இல்லாமல் சிக்க வைத்தனர்.  லோக்நாத் பெஹரா என்னை பிளாக் மெயில் செய்து மிரட்டி உள்ளார்.  அதனால் இந்த வழக்கை சி பி ஐ க்கு மாற்றி சி பி ஐ விசாரிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்.  சி பி ஐ விசாரணையில் பல உண்மைகள் வெளி வரும்” என தெரிவித்துள்ளார்.

இந்தக் கடிதம் பற்றிய செய்திகள் தற்போது தான் வெளியாகி உள்ளன.   ஆனால் திலிப் இந்தக் கடிதத்தை சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்த அன்றே உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பியதாக திலீப் தரப்பில் சொல்லப்படுகிறது.