சேலம்

றைந்த முதல்வர் ஜெயலலிதாவை குற்றவாளி என சொன்ன ராமதாசுடன் கூட்டணி வைத்துள்ளதை அம்மா ஆன்மா மன்னிக்காது அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறி உள்ளார்.

இன்று அதிமுக மற்றும் பாமக இடையே தேர்தல் கூட்டணி உடன்படிக்கை கையெழுத்தானது. இந்த கூட்டணியில் பாமகவுக்கு 7 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அத்துடன் மாநிலங்களவையில் ஒரு இடமும் அளிக்கப்பட உள்ளது. இந்த கூட்டணியை பல கட்சித் தலைவர்கல் கடுமையாக விமர்சித்துள்ளனர். அ ம மு க கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று சேலத்தில் செய்தியாளரகளை சந்தித்தார்.

அப்போது தினகரன், “கட்சிகளிடையே அரசியல் வேறுபாடுகள் இருப்பதும் தேர்தல் நேரத்தில் கூட்டணி அமைப்பதும் வாடிக்கையான ஒன்றாகும். ஆனால் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை குற்றவாளி எனவும் அவர் உயிருடன் இருந்தால் சிறையில் இருப்பார் எனவும் பாமக தலைவர் ராமதாஸ் கூறி உள்ளார். அதனால் அவருக்கு நினைவிடம் அமைக்கக் கூடாது எனவும் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அம்மாவையே எதிர்த்தவர்களுடன் அம்மாவின் அரசு நடத்துவதாக கூறிக் கொள்ளும் எடப்பாடியும் ஓ பன்னீர்செல்வமும் கூட்டணி அமைத்துள்ளனர். ஜெயலலிதா சிறையில் இருந்திருப்பார் எனவும் அதனால் அவருக்கு நினைவிடம் அமைக்கக் கூடாது என எதிர்த்தவர்களிடம் கூட்டணி வைத்துள்ளது கண்டிக்கத்தக்கது. இவர்களை அம்மாவின் ஆன்மா நிச்சயம் மன்னிக்காது.

அம்மாவுக்கு துரோகம் செய்துள்ள இவர்கள் யாருக்கு வேண்டுமானாலும் துரோகம் செய்வார்கள். இந்த கூட்டணி மிகவும் பலகீனமான கூட்டணி. இது நிச்சயம் அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடையும். இதற்கு முன்பு ஆர் கே நகரில் இவர்கள் அதிகாரத்தை பயன்படுத்தியும் வெல்ல முடியவில்லை. அதைப் போல இம்முறையும் அமமுக வெல்லும்” என தெரிவித்துள்ளார்.