திண்டுக்கல்

ழைய வத்தலகுண்டு ஊராட்சி தலைவர் வேட்பாளர் யசோதையின் கணவர் முருகேசன் பிரசாரத்தின் போது மரணம் அடைந்தார்.

தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் வத்தலகுண்டு ஒன்றியத்தில் பழைய வத்தலகுண்டு என்னும் சிற்றூர் உள்ளது.   இங்கு ஊராட்சி தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.   ஏற்கனவே இங்கு ஊராட்சி தலைவராகப் பதவியில் இருந்தவர் முருகேசன் என்பவர் ஆவார். தற்போது  இவருடைய மனைவி யசோதை போட்டியிடுகிறார்

இந்த கிராமத்தில் தேர்தல் பிரச்சாரம் மும்முரமாக நடைபெற்று வருகிறது.  முன்னாள் தலைவர் முருகேசன் தனது மனைவியுடன் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் பிரசாரம் செய்து வந்தார்.  அந்த சமயத்தில் முருகேசனுக்கு திடீரென நெஞ்சுவலி வந்து மயங்கி விழுந்தார்.

அவரை அருகில் இருந்தோர் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.  சிகிச்சை பலனின்றி முருகேசன் மரணம் அடைந்தார்.  தேர்தல் பிரசாரத்தின் போது வேட்பாளரின் கணவர் மரணம் அடைந்தது மக்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.   முருகேசனுக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் இன்று மற்ற வேட்பாளர்கள் பிரசாரத்தை ரத்து செய்துள்ளனர்.