சென்னை: என் புகைப்படத்தை அனுமதியில்லாமல் பயன்படுத்தினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று நடிகர் விஜய் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்து அவ்வப்போது பேச்சுகள் எழுவது உண்டு. அண்மையில் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் அவரது தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் கட்சி ஒன்றை தொடங்கினார்.

அதற்கும் தமக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று கூறி தமது பெயரையோ, புகைப்படத்தை பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று விஜய் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தார். மேலும், விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்து சிலரை நீக்கினார்.

இந் நிலையில், விஜய் மக்கள் இயக்கத்தின் புதிய நிர்வாகிகளின் 2வது பட்டியலை வெளியிட்டுள்ள நடிகர் விஜய், என் புகைப்படத்தை அனுமதி பெற்று பயன்படுத்த வேண்டும். மீறுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அந்த அறிவிப்பில் அவர் கூறி இருப்பதாவது: எனது புகைப்படம், இயக்கத்தின் பெயர் மற்றும் கொடி உள்ளிட்ட அனைத்து பயன்பாடுகளையும் மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள், மாவட்ட தலைவர் மற்றும் அணித் தலைவர்களின் அனுமதி பெற்று பயன்படுத்த வேண்டும். அதனை மீறுவோர் மீது இயக்கத்தில் சார்பாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.