டில்லி

நாடெங்கும் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் டில்லி கலவரம் குறித்த நாடாளுமன்ற விவாதம் ஹோலிப் பண்டிகைக்கு பிறகு நடைபெறும் என மக்களவை சபாநாயகர்  ஓம் பிர்லா அறிவித்துள்ளார்.

டில்லியில் நடந்த குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் கடும் வன்முறை வெடித்தது.  சுமார் 48 பேர் கலவரத்தில் உயிரிழந்தனர்.    சுமார் 200க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்   நான்கு மசூதிகள், பலருடைய இல்லங்கள், பொதுச் சொத்துக்கள் , தனியார் வாகனங்கள் உள்ளிட்டவை தீக்கு இரையாகின.   ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டு தற்போது சிறிது சிறிதாக அமைதி திரும்புகிறது/

இது குறித்து தற்போதைய நாடாளுமன்ற கூட்டத்தில் விரிவான விவாதம் நடத்த வேண்டும் என அனைத்து எதிர்க்கட்சிகளும் கோரிக்கை விடுத்தன.  இதற்கு சபாநாயகர் அனுமதி அளிக்காததால் கடும் அமளி ஏற்பட்டுள்ளது.  நேற்று மட்டும் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் இந்த அமளியால் இரு முறை ஒத்தி வைக்கப்பட்டது.   மதியம் 2 மணிக்கு அவை கூடிய போதும் அமளி தொடர்ந்தது

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கூட்டத்தில், “டில்லி கலவரம் குறித்து விவாதம் நடத்த அரசு தயாராக உள்ளது.  வரும் மார்ச் மாதம்  11 ஆம் தேதி அன்று ஹோலி பண்டிகைக்குப் பிறகு இந்த விவாதம் நடத்த உள்ளதாகவும் அரசு அறிவித்துள்ளது.   நீங்கள் ஹோலி பண்டிகையைக் கொண்டாடி விட்டு வாருங்கள்.  அதன் பிறகு அரசுடன் டில்லி கலவரம் குறித்த விரிவான விவாதத்தை நடந்துங்ங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.