சென்னை: அமமுக கூட்டணியில் இணைந்துள்ள தேமுதிகவுக்கு 60 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய தேமுதிக இப்போது அமமுகவுடன் கை கோர்த்துள்ளது. இவ்விரு கட்சிகளுக்குமான கூட்டணி ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.

இந்த கூட்டணி ஒப்பந்தத்தில் கூறப்பட்டு உள்ளதாவது: 06.04.2021 அன்று நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத்தேர்தலில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமும், தேசிய முற்போக்கு திராவிட கழகமும் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திப்பது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கும் இடையே இன்று ஏற்பட்ட ஒப்பந்தப்படி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில், தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கு தமிழ்நாட்டில் கீழ்காணும் 60 (அறுபது) சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

இந்த தோழமை உடன்பாட்டை அடுத்து தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர்கள் திரும்பப் பெறப்படுகிறார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.