சென்னை :

மிழகத்தில் டிசம்பர் மாதம் இறுதியில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதிமுகவிடம் தொகுதிகள் குறித்து பேசுவதற்காக கூட்டணி கட்சியான தேமுதிக 5 பேர் கொண்ட குழுவை அமைத்து உள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகளை அரசு முடுக்கிவிட்டுள்ள நிலையில், திமுக, அதிமுக, தேமுதிக கட்சிகள் விருப்பமனு வாங்கி வருகின்றன. தேமுதிக தரப்பில் உள்ளாட்சி தேர்தலுக்கான விருப்ப மனு வினியோகத்தை, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் நேற்று கட்சி அலுவலகத்தில் துவக்கி வைத்தார்.

அதைத்தொடர்ந்து, அனைத்து மாவட்ட தே.மு.தி.க., அலுவலகங்களிலும், விருப்ப மனுக்கள் வினியோகம் நேற்று துவங்கியது.

சென்னை மாநகராட்சியில், மேயர், கவுன்சிலர் பதவிகளுக்கு போட்டியிட விரும்புவோருக்கு, கோயம்பேடில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில், விஜயகாந்த் விருப்ப மனுக்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், பொருளாளர் பிரேம லதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதற்கிடையே, உள்ளாட்சி ஒதுக்கீடு தொடர்பாக, அ.தி.மு.க.,வுடன் பேச்சு நடத்த, 5 பேர் கொண்ட  குழுவை விஜயகாந்த் நியமித்துள்ளார். இதில், மாநில துணை செயலர்கள் சுதீஷ், பார்த்தசாரதி, அக்பர், அவை தலைவர் இளங்கோவன், கொள்கை பரப்பு செயலர் மோகன்ராஜ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்த குழுவினர் அதிமுகவிடம் பேசி, தாங்கள் போட்டியிடும் தொகுதிகளை உறுதி செய்வார்கள் என்று கூறப்பட்டுள்ளது.