சென்னை: அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக, தமாகா கட்சிகள் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துகின்றன. இந்த பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, கூட்டணி கட்சிகளுடன் உடன்பாடு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக நம்பப்படுகிறது.

அதிமுக கூட்டணியில் உள்ள பாமக, பாஜகவுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில்,  தேமுதிகவுக்கு தொகுதிகள் ஒதுக்கப்படுவதில் அதிருப்தி நிலவி வருகிறது. மேலும்,  தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு உடன்பாடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றன. , அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்துடன், தேமுதிக துணைச் செயலாளர் சுதீஷ் சந்தித்து தொகுதிகள் ஒதுக்கீடு குறித்து  பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த நிலையில், அதிமுகவுடன் கூட்டணி கட்சிகளான தேமுதிக, தமாகா கட்சிகள் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துகின்றன. இதில்,  தேமுதிகவுக்கு அதிகபட்சமாக  15 தொகுதிகள் வரை தருவதற்கு அதிமுக முன்வந்துள்ளதாகவும்,  இதற்கான ஒப்பந்தம்  இன்று மாலை தேமுதிக தலைவர் விஜயகாந்த் முன்னிலையில்  கையெழுத்தாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதுபோல, அதிமுக – தமிழ் மாநில காங்கிரஸ் இடையே இன்று  தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிக பட்சமாக 6 தொகுதிகள் வழங்க அதிமுக முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.