சென்னை: திமுக கூட்டணியில் இணைந்து சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்று தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. தேர்தல் அறிக்கையை கட்சித் தலைவர் திருமாவளவன் வெளியிட்டு, அது தொடர்பான தகவல்கள் விவரித்தார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில்  இடம்பெற்றுள்ள  விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு  6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.  அந்த தொகுதிகளில் பானை சின்னத்தல் விசிக போட்டியிடுகிறது. இந்த நிலையில்,  விசிக தேர்தல் அறிக்கையை கட்சித்தலைவர் திருமாவளவன் இன்று விழுப்புரத்தில் வெளியிட்டார்.

தேர்தல் அறிக்கையின் சிறப்பு அம்சங்கள்:

தமிழ் நாட்டில் நடைமுறையில் உள்ள 69 விழுக்காடு இட ஒதுக்கீடு முறை பாதுகாக்கப்படும்.

கல்வித்துறையை பொதுப பட்டியலில் இருந்து விடுவித்து மாநில அதிகாரிகளுக்கான பட்டியலில் இணைக்க வேண்டும்

தமிழ் வழி மழலையர் வகுப்புகளை கட்டாயமாக்க வேண்டும்

மருத்துவம் ,பொறியியல் ,சட்டம், உயர்கல்வி படிப்புகள் தமிழ் வழியில் வழங்கப்படும்

மாநில அரசின் கடன் சுமைகளை மத்திய அரசு ஏற்றுக்கொள்ள வலியுறுத்தல்

தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கும் உரிமையை நிலைநாட்டும் வகையில் சிறப்பு சட்டம் இயற்றப்பட வேண்டும்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேர் விடுதலை செய்ய வலியுறுத்தல்

புதிய வேளாண் திட்டங்களை தமிழகத்தில் நடைமுறைப்படுத்துவது தடுக்க போராட்டம் தொடரும்

வேளாண்மையை மேம்படுத்த தனி வரவுசெலவுத்திட்டம்

100 நாள் வேலை வாய்ப்பை வேளாண்மைக்கும், சமூக காடுகள் வளர்ப்பு திட்டத்திற்கும் நீட்டிப்பு செய்து 200 நாளாக உயர்த்தவும்

அனைத்து வகுப்புகளிலும் மாணவர்களுக்கு விவசாய பாடத் திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும்

மின் உற்பத்தி திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு, தமிழகத்தை மின் உபரி மாநிலமாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

இடஒதுக்கீடு முறை பற்றிய வெள்ளை அறிக்கையை வெளியிடச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

சாதி மறுப்பு திருமணம் புரிந்தோருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை; தம்பதியனரைப் பாதுகாக்க தனி காவல் பிரிவு உருவாக்க வலியுறுத்துவோம்.

தமிழ்ப் பெயரில்லாத திரைப்படங்களுக்கு இரட்டிப்பு வரி விதிக்க நடவடிக்கை எடுப்போம்.

திருநங்கையருக்கு கல்வி – வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டித் தர முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

பட்டியலின இடஒதுக்கீட்டை 2011 மக்கள்தொகை அடிப்படையில் 21% ஆக உயர்த்த வலியுறுத்தப்படும்

பெண்களுக்கு 33 விழுக்காடு அமல்படுத்தவும் பின்னர் அதை 50 விழுக்காடாக உயர்த்திடவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மீனவ மக்கள் மீன் பிடி தொழிலின் போது இறந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்

இவ்வாறு ஏராளமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.