சென்னை:

விக்கிரவாண்டி, நாங்குனேரி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி, நாங்குனேரி தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, அங்கு வரும் 21ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. விக்கிரவாண்டி தொகுதியில், திமுக வேட்பாளராக புகழேந்தியும், நாங்குனேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ரூபி மனோகரனும் போட்டியிடுகின்றனர்.

கடந்த 3 நாட்களாக நாங்குனேரியில் முகாமிட்டிருந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ரூபி மனோகரனை ஆதரித்து கிராமம் கிராமாக சென்று வாக்கு சேகரித்தார். இன்று சென்னை திரும்ப தூத்துக்குடி, விமான நிலையம் வந்தவர், செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது,  சீன் அதிபர் குறித்த கேள்விக்கு பதில் அளித்தவர்,  சீன அதிபர் வருகையை ஏற்கனவே வரவேற்றிருக்கிறேன் என்றவர்,  இந்த பயணம், பயனுள்ள பயணமாக அமையும் என்ற அடிப்படையில், என்னுடைய கருத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன் என்றார்.

மேலும், நடைபெற உள்ள  இடைத்தேர்தலில் நாங்குநேரியாக இருந்தாலும், விக்கிரவாண்டியாக இருந்தாலும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிதான் மாபெரும் வெற்றி பெறப் போகிறது என்றும் கூறினார்.