சென்னை:  திமுக கூட்டணியில் எங்களுக்கு  ஒதுக்கும் தொகுதிகள் போதுமானதாக இல்லை என மார்க்சிய கம்யூனிஸ்டு மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார்.

திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு நடைபெற்று வருகிறது. ஏற்கனவே முஸ்லிம் லீக், மமக, விசிக, இ.கம்யூனிஸ்டு போன்ற கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, உடன்பாடு ஏற்பட்ட நிலையில், காங்கிரஸ், மதிமுக, மா.கம்யூனிஸ்டு கட்சிகளிடையே  இதுவரை உடன்பாடு எட்டப்படாமல் இழுபறி நீடித்து வருகிறது.

இந்த நிலையில்,  சென்னை அண்ணா அறிவாலயத்தில் ச திமுக – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இடையே இன்று மீண்டும்  பேச்சுவார்த்தை‘நடைபெற்றது. சுமார் ஒரு மணிநேரம் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த   மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்  “சட்டப்பேரவைத் தேர்தல் தொகுதிப்பங்கீடு குறித்து திமுகவினருடன் பேசினோம். அவர்கள் ஒதுக்கும் தொகுதிகள் எங்களுக்கு போதுமானதாக இல்லை. எங்களுக்கு எத்தனை தொகுதிகள் வேண்டும் என்பது குறித்து எங்களது கருத்தைத் தெரிவித்திருக்கிறோம். இன்று மாலை திமுகவினர் நல்ல முடிவை அறிவிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொகுதி ஒதுக்கீட்டில் ஏற்பட்டுள்ள இழுபறியைத்தொடர்ந்து, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயற்குழுக் கூட்டம் இன்று மாலை  நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.