சென்னை

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சிறுபான்மையினரை அநாகரிகமாகப் பேசியதற்காக திமுக செய்தி தொடர்பாளர் டி கே எஸ் இளங்கோவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நாங்குநேரி பகுதியில் தேர்தல் பிரசாரத்துக்குச் சென்றிருந்த தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை அதிமுகவின் சிறுபான்மை பிரிவைச் சேர்ந்த சிலர் சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளனர்.  அப்போது ராஜேந்திர பாலாஜி அவர்களிடம் கடுமையாகப்  பேசி மனுவை வாங்க மறுத்ததாக கூறப்படுகிறது.   இது தமிழக அரசியலில் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.

இது குறித்து மக்களவை உறுப்பினரும் திமுக செய்தித் தொடர்பாளருமான டி கே எஸ் இளங்கோவன் தனது அறிக்கையில், “நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட களக்காடு பகுதியில் வாக்குச் சேகரிக்கச் சென்ற அமைச்சர் ராஜேந்திர பாலாஜியைச் சந்தித்த அதிமுகவைச் சேர்ந்த சிறுபான்மையினர் ஒருவர், அவரது சமூகத்தை சேர்ந்த சிலரை அழைத்துக் கொண்டு கோரிக்கை மனு வழங்கினார்.

அப்போது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ‘உங்களுக்கு நாங்கள் ஏன் உதவ வேண்டும். நீங்கள் எங்களுக்கு ஓட்டுப் போடமாட்டீர்கள்; உங்களிடம் நான் மனு வாங்க மாட்டேன்’ என்றெல்லாம் வாய்க்கு வந்தபடி கடுமையாகப் பேசியுள்ளார்.

இதுபோல், அநாகரிகமாக – அருவருக்கத்தக்க வகையில், சிறுபான்மையினரைப் பற்றி பேசியுள்ள அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அமைச்சர் பதவி வகிக்க தகுதியற்றவர் ஆகிறார். சிறுபான்மை மக்களைப் பற்றி இப்படிப் பேசிய அவர் உடனடியாக அவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

தமிழகத்தைப் பொறுத்தவரை, அனைத்து மத மக்களும் நட்புடனும் – நல்லுறவுடனும் – சகோதரத்துவத்துடனும் பழகி வருகிறார்கள். ராஜேந்திர பாலாஜியின் இத்தகைய பொறுப்பற்ற பேச்சை திமுக வன்மையாகக் கண்டிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.