சென்னை: முரசொலி வைத்திருந்தால் தமிழன் என்று ரஜினிகாந்துக்கு திமுக பதிலடி கொடுத்துள்ளது.

துக்ளக் பத்திரிகையின் 50வது ஆண்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த், முரசொலி வைத்திருந்தால் அவர்கள்  திமுகவினர், துக்ளக் வைத்திருந்தால் அவர்கள் அறிவாளி என்றார். அவரின் இந்த பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன.

ரஜினிகாந்தின் கருத்துக்கு திமுக இப்போது அதிரடியாக பதில் அளித்து இருக்கிறது. முரசொலி நாளிதழ் அதன் தலையங்கத்தில் ரஜினியை கடுமையாக விமர்சித்து இருக்கிறது.

அந்த தலையங்கத்தில் கூறப்பட்டு உள்ளதாவது: முரசொலி வைத்திருந்தால் தமிழன் என்று பொருள். அதுவும் திராவிட இயக்கத் தமிழன் என்று பொருள். ‘முரசொலி’ வைத்திருந்தால் ஒடுக்கப்பட்ட சமூகத்தவன் என்று பொருள்.

தன்னை ஒடுக்கியவர் யாரென்று உணரத் தொடங்கி விட்டவன் என்று பொருள். இனியும் ஒடுங்க மறுப்பவன் என்று பொருள். ஒடுக்கியவர் திமிர் ஒடுங்க ஒன்று சேர்பவன் என்று பொருள். ‘எத்தனை மிகமிக என்று போட்டுக் கொள்ளுங்கள்’ என்று பொருள்.

மிகமிக பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பாடுபடுவன்’ என்று பொருள். ‘தான் யாருக்கும் அடிமையில்லை; தனக்கும் யாரும் அடிமையில்லை’ என்பவன் என்று பொருள். ’முரசொலி வைத்திருந்தால் தமிழன் தாழ ஒரு போதும் ஒப்பான் என்று பொருள்.

கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதார மேன்மை ஆகிய மூன்றும் பெற்ற சமூகமாக தமிழ்ச் சமூகம் உயர்வடைய நினைப்பவன் என்று பொருள். முரசொலி வைத்திருந்தால் ஒரு பொன்னுலகு உருவாக்கும் போராட்டத்தில் தன் பெயரை இணைத்துவிட்ட உடன்பிறப்பு என்று பொருள்.

பெரியார் – அண்ணா – கலைஞர் வழியில் புதிய தமிழகம் படைக்கப் புறப்பட்ட ‘தளபதி’ என்று பொருள். முரசொலியை நீங்கள் வைத்திருந்தால் ‘மனிதன்’ என்று பொருள் என குறிப்பிடப்பட்டுள்ளது.