சென்னை: திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வரும் 21ந்தேதி நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில்,  திமுக ஆக்கப்பணிகள் குறித்து விவாதிக்க ஜன-21 அன்று திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஸ்டாலின் தலைமையில் நடக்க உள்ளதாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

புதுச்சேரியில் திமுக தலைமையில் ஆட்சி அமையவேண்டும் என்ற பேச்சு அடிபட்டு வருகிறது. முன்னதாக கிரண்பேடிக்கு எதிரான காங்கிரஸ் போராட்டத்தில் திமுக கலந்துகொள்ளாமல் புறக்கணித்து. அதுபோல, அங்கு திமுக தன்னிச்சையாக போராட்டம் நடத்தப்போவதாகவும் அறிவித்து உள்ளது. இதனால் திமுக அணியில் காங்கிரஸ் நீடிக்குமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

இந்த நிலையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை கூட்டியுள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் இந்தக்கூட்டம் நடக்க உள்ளது.  இந்த கூட்டத்தில் கூட்டணி, தொகுதி நிலவரம் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது.

இதுகுறித்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

‘தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வருகிற ஜன.21 வியாழக்கிழமை மாலை 5.00 மணி அளவில் சென்னை, அண்ணா அறிவாலயம், “கலைஞர் அரங்கத்தில்” நடைபெறும். கழக ஆக்கப் பணிகள்’ குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றும்,   மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.