சென்னை:

ள்ளாட்சித் தேர்தலைக் கண்டு திமுக மிரட்சியுடன் இருக்கிறது என்று தமிழக அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார்.

அடுத்த மாதம் இறுதியில் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்பமனு வாங்கலாம் என்று முக்கிய கட்சிகளான திமுக, அதிமுக, தேமுதிக அறிவித்து உள்ளது.

திமுகவில் நேற்று முதல் விருப்பமனு விநியோகம் தொடங்கிய நிலையில், இன்று அதிமுக, தேமுதிகவில் விருப்பமனு விநியோகம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

அதிமுக தலைமை அலுவலகத்தில், விருப்பமனு விநியோகம் இன்று தொடங்கிய நிலையில், அமைச்சர் ஜெயக்குமார் விருப்ப மனுக்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர் கூறியதாவது,

தமிழகத்தில் அடிப்படை கட்டமைப்புகளை அரசு செம்மையாக செய்துள்ளது. நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலின்போது, தங்களது பகுதிகிளின் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் எவ்வாறு செய்யப்பட்டு உள்ளது என்பதை அந்த பகுதி மக்கள் பார்த்து வாக்களிப்பார்கள் என்றார்.

தொடர்ந்து பேசியவர், தமிழகத்தில்,  சாலைகள், மழைநீர் சேமிப்பு வசதிகள், கழிவுகள் மேலாண்மை, தங்கு தடையற்ற மின்சாரம், இப்படி பல்வேறு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் தமிழகம் முழுவதும் மேம்படுத்தப்பட்டுள்ளது,  சட்டம்-ஒழுங்கைப் பொறுத்தவரையில் அமைதிப் பூங்கா என்று சொல்லும் வகையில் இருக்கிறது. அதனால்தான்  தமிழகத்தில் தொழில் செய்வதற்கு பலர் ஆர்வம் காட்டுகின்றனர் என்று தெரிவித்தவர்,  இந்த விஷயங்கள் உள்ளாட்சித் தேர்தலில் பிரதிபலிக்கும் என்றார்.

தமிழக மக்களின் எண்ணங்களை 100% அதிமுக அரசு  பூர்த்தி செய்திருப்பதால், உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும் என்று கூறியவர்,  உள்ளாட்சித் தேர்தலைக் கண்டு  திமுக மிரட்சியுடன் இருக்கிறது என்றார்.

நேற்று நடைபெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் குறித்த கேள்விக்கு,  நிர்வாக ரீதியில் அதிகாரிகள் மாறுதல் என்பது சகஜம் என்று தெரிவித்தவர், பலம் இருந்தால் பயப்படத் தேவையில்லை. நீச்சல் தெரிந்தவர்களுக்கு கடல் ஆழத்தைப் பற்றி கவலை இருக்காது. அது போன்றுதான் அதிமுகவுக்கும் பயம் இல்லை.

இவ்வாறு  அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.