சென்னை: திமுக பொதுக் குழு கூட்டம் வரும் 29ம் தேதி கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக பொதுச் செயலாளராக 43 வருடங்கள் இருந்த பேராசிரியர் க. அன்பழகன் மார்ச் 7ம் தேதி காலமானார். திமுக சார்பில் ஒரு வாரம் துக்கம் அனுசரிக்கப்பட்டு, அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன.

அன்பழகன் மறைவுக்கு அண்ணா அறிவாலயத்தில் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. நிகழ்ச்சியில், திமுக கூட்டணி தலைவர்கள் கலந்து கொண்டு பேசினார்.

இந் நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் இன்று  வெளியிட்ட அறிவிப்பில், கட்சியின் பொதுக்குழு வரும் 29ம் தேதி கூடும் என்றார். அந்த அறிவிப்பில் அவர் கூறி இருப்பதாவது:

திமுக பொதுக் குழு கூட்டம் மார்ச் 29ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் எனது தலைமையில் நடைபெறும். அதுபோது பொதுக் குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.