சென்னை: உடல் நலன் குறித்து அக்கறையுடன் விசாரித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி என்று திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.

திமுக எம்பியும், திமுக மகளிரணி செயலாளருமான கனிமொழி திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். அவருக்கு கடந்த 3 ம் தேதி கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, கனிமொழி தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். பின்னர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில்  தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார்.

இந்நிலையில், தனக்கு கொரோனா ஏற்பட்டுள்ள தகவலையும், மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் தகவலையும் கனிமொழி எம்.பி. உறுதி செய்துள்ளார்.

இது தொடர்பாக, அவர் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:  எனக்கு கோவிட்- 19 தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, என்னை நான் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன். மருத்துவமனையில் எனக்குத் தேவையான மருத்துவ உதவிகள் அளிக்கப்படுகின்றன. எனது உடல் நலன் குறித்து அக்கறையுடன் விசாரித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி என்று தெரிவித்துள்ளார்.