சென்னை: திமுக முதன்மைச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேருவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் இன்னமும் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரசுக்கு தடுப்பூசி போட தொடங்கிய இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதால் அந்நாட்டு மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

பல நாடுகள் இங்கிலாந்துடனான விமான போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன. இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டாலும், மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர் முன்களப் பணியாளர்கள் என பலரும் கொரோனாவுக்கு ஆளாகி வருகின்றனர்.

எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். இந் நிலையில், முன்னாள் அமைச்சரும்., திமுகவின் முதன்மைச் செயலாளருமான கே.என்.நேருவுக்கு கொரோனா அறிகுறிகள் காணப்பட்டது.

இதையடுத்து, அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா இருப்பது தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, நேற்று துறைமுகம் தொகுதி எம்எல்ஏ சேகர் பாபுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.