சென்னை: திமுக தலைவர் முக ஸ்டாலின்  இன்று சென்னை காவேரி மருத்துவமனைக்கு சென்று கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். அப்போது அவரது துணைவியார் துர்கா உடனிருந்தார்.

நாடு முழுவதும் தொற்று பரவலில் இருந்து பாதுகாத்துக்கொள்ளும் வகையில் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணி ஜனவரி 16ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. மார்ச் 1ந்தேதி முதல் 2வது கட்ட தடுப்பூசி செலுத்தும் பணி 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், இணை நோய்கள் கொண்ட 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் செலுத்தப்பட்டு வருகிறது. அதையடுத்து,  பிரதமர் நரேந்திர மோடி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, கேரளா முதல்வர் பினராயி விஜயன் மற்றும் பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் உட்பட பல அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என லட்சக்கணக்கானோர்  கொரோனா தடுப்பூசி எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில்,  திமுக தலைவர் மு.க ஸ்டாலின் சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். அதைத்தொடர்ந்து, அங்குள்ள செவிலியர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டவர், அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.