சென்னை: தமிழ்வழிக் கல்வி பயின்றோருக்கு தமிழக அரசுப் பணியில் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு 8 மாதங்களாக ஆளுநர் ஒப்புதலை பெறாமல் காலம் தாழ்த்தப்படுவதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: பட்டப்படிப்பு தகுதிக்கான அரசுப் பணிக்கு, பட்டப்படிப்பிற்கு முன்பு 10 மற்றும் 12ம் வகுப்புகளையும், 10-ஆம் வகுப்பு தகுதிக்கான அரசுப் பணிக்கு, 6ம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை தமிழ்வழியில் படித்திருக்க வேண்டும்” என்று கடந்த மார்ச் மாதம் தமிழகச் சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட சட்டத் திருத்த மசோதாவிற்கு ஏறக்குறைய 8 மாதங்களாக, தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பது மிகுந்த வேதனைக்குரியது.

இந்த மசோதாவிற்கு ஒப்புதல் பெற அ.தி.மு.க. அரசு எந்த முயற்சியும்  எடுக்கவில்லை என்று, சமீபத்தில் என்னைச் சந்தித்த போட்டித் தேர்வுகளுக்குப் பயிலும் மாணவர்கள் தெரிவித்தார்கள். தற்போது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை முன்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வழக்கறிஞரே, 8 மாதங்களாக ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை என்று கூறியிருப்பது பேரதிர்ச்சியளிக்கிறது.

அத்துறைக்கான அமைச்சர் என்ன செய்கிறார்? சட்ட அமைச்சர் என்ன மாதிரி மனநிலையில் இத்தனை மாதங்களாக மசோதாவிற்கு ஒப்புதல் பெறாமல் காலம் கழிக்கிறார்?இவர்களுக்கு எல்லாம் தற்சமயம் தலைவராக இருக்கும் முதலமைச்சர் திரு. பழனிசாமி, தமிழக அரசின் நிர்வாகத்தில் கவனம் செலுத்துகிறாரா, இல்லையா என்ற அடுக்கடுக்கான கேள்விகள் எழுகின்றன.

அரசு வேலைவாய்ப்புகளில் தமிழ்வழியில் பயின்ற மாணவர்களுக்குப் பயனளிக்கும் இந்தச் சட்டத் திருத்தத்திற்கு இவ்வளவு மாதங்களாகத் தமிழக ஆளுநர்  ஒப்புதல் அளிக்காமல் இருப்பது ஏன்? இப்போது உயர்நீதிமன்றத்தில் போடப்பட்டுள்ள வழக்கில், குரூப்-1 தேர்வுகளில் தமிழ்வழி பயின்றவர்களுக்கான இடஒதுக்கீடு முறையாக அமல்படுத்தப்படவில்லை என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

அரசுப் பணிகளில் எல்லாம் – மிக முக்கியமாகத் தமிழகத்தின் நிர்வாகக் கட்டமைப்பில் ஆக்கபூர்வமாகப் பணியாற்றும் வாய்ப்புள்ள குரூப்-1 பதவிகளிலேயே முறையாக இந்த இடஒதுக்கீடு செயல்படுத்தப்படவில்லை என்று தெரிந்தும் – முதலமைச்சர் எடப்பாடி திரு. பழனிசாமி சட்டமன்றம் ஒப்புதல் அளித்த சட்டத் திருத்தத்திற்கு அனுமதி பெறாமல் – ஆளுநர் அவர்களுக்கு உரிய அழுத்தம் தராமல், “அரசியல் விளம்பரத்திற்காக” ஒவ்வொரு ஊராகச் சுற்றி வருவது மிகுந்த கண்டனத்திற்குரியது.எனவே, துவக்கத்திலிருந்து தமிழ்வழியில் பயின்ற மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்க – மார்ச் 16-ஆம் தேதி சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பியுள்ள சட்டத் திருத்தத்திற்கு உடனடியாகத் தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இந்தச் சட்டத் திருத்தத்திற்கு ஒப்புதல் பெறுவதையும் காலம் தாழ்த்தி -அதற்காகத் திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு மாபெரும் போராட்டத்தை நடத்திடும் சூழ்நிலையை உருவாக்கிட வேண்டாம் என அ.தி.மு.க. அரசுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன் என்று ஸ்டாலின் கூறி உள்ளார்.