சென்னை: இந்தியை காப்பாற்றுவதை விட, கொரோனாவிலிருந்து மக்களை காப்பாற்ற உள்துறை அமைச்சர் அமித்ஷா கவனம் செலுத்த வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: இந்திய நாட்டின் உள்துறை  மந்திரியாக இருக்கும் அமித்ஷா அவர்கள், இந்தி மொழி இந்நாட்டை ஒருங்கிணைப்பதாகச் சொல்லி இருக்கிறார்.

பன்முகத் தன்மையுடன் பரந்து விரிந்திருக்கும் இந்நாட்டை, ஒரு சில மாநில மக்கள் மட்டுமே பேசும் மொழி எப்படி ஒருங்கிணைக்க முடியும்? வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியாவின் ஒருமைப்பாட்டைக் கெடுக்கும் ஒன்றாகத்தான் இந்தி இருக்கிறது என்பதை அமித்ஷா அவர்கள் உணர வேண்டும்.

இந்தியைக் காப்பாற்றுவதை விட, கொரோனாவில் இருந்து இந்தியரைக் காப்பாற்றுவதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா  கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.