சென்னை: சீன தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர் பழனியின் மரணத்திற்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

லடாக்கில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கில் இந்தியா, சீனா எல்லைகள் தொடர்பான பிரச்னை ஒரு மாதமாக நீடித்து வருகிறது. பாங்கோங் த்சோ ஏரியில் சீன படையினர் அத்துமீறி ரோந்து பணிகளில் ஈடுபடுவதாக செய்திகள் வெளிவந்தன. இ

அந்த ஏரியின் அருகே இந்தியா, சீனா வீரர்களுக்கிடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பு உருவானது. லடாக் எல்லைப்பகுதியில் சீனா ராணுவத்தை குவிக்க, பதிலடியாக இந்தியாவும் ராணுவத்தை குவித்ததால் போர் அபாயம் ஏற்பட்டது.

இந்நிலையில், இரு நாட்டு ராணுவ உயர் அலுவலர்கள் பேச்சுவார்த்தை முடிவில், படைகளை திரும்பப் பெற்றுக்கொள்ள இரு தரப்பும் ஒப்புக் கொண்டன. அதன்படி, படைகளை திரும்பப் பெறும் நடவடிக்கையின்போது நேற்றிரவு இரு தரப்பு ராணுவத்திற்குமிடையே மோதல் ஏற்பட்டது. கால்வான் பகுதியில் நடைபெற்ற இந்த மோதலில் மூன்று இந்திய வீரர்கள் மரணமடைந்தனர்.

மேலும், அவர்களில் ஒருவர் ராமநாதபுரத்தைச் சேர்ந்த பழனி என்பது தெரியவந்துள்ளது..பழனியின் மரணத்திற்கு தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

அதில், லடாக்கில் நடந்துவரும் மோதலில் இன்னுயிர் ஈந்த இந்திய ராணுவ வீரர்கள் மூவரின் தியாகத்துக்கு வீரவணக்கம். 22 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி, தனது உயிரையும் ஈந்துள்ள ராமநாதபுரம் மாவட்டம் கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த பழனியின் குடும்பத்துக்கு ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று  பதிவிட்டுள்ளார்.