திருச்சி: திருச்சியில் விடியலுக்கான முழக்கம் என்ற சிறப்பு பொதுக்கூட்டத்தின் தொடக்க நிகழ்ச்சியாக கட்சிக் கொடியை திமுக தலைவர் ஸ்டாலின் ஏற்றி வைத்தார்.

திருச்சியில் திமுகவின் விடியலுக்கான முழக்கம் பொதுக் கூட்டம் இன்று நடைபெறும் என்று அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி,கூட்டத்திற்கான பிரமாண்டமாக 750 ஏக்கரில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

3 மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. திமுக தலைவர் .ஸ்டாலின் உரையாற்றவும் நடந்து சென்று தொண்டர்களிடம் பேசவும் நீண்ட நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது. மற்ற 2 மேடைகளில் கட்சியின் தலைமை நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் அமரும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில், சிறப்பு பொதுக்கூட்டத்தில் தொடக்க நிகழ்ச்சியாக 90 அடி உயர கொடிக் கம்பத்தில் திமுக கொடியேற்றி சிறப்பு பொதுக்கூட்டத்தை ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தொடக்க விழாவில் நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் பங்கேற்றனர்.

மாலை 5 மணிக்கு பொதுக்கூட்டத்தில்  ‘விடியலுக்கான முழக்கம்’ உறுதி மொழிகள் குறித்தும் தமிழகத்தின் 10 ஆண்டு தொலைநோக்கு திட்டங்கள் குறித்தும் ஸ்டாலின் அறிவிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.