சென்னை: திமுகவில் உள்ள  சிறுபான்மையினர் அணி சார்பில் டிசம்பர் 6ந்தேதி சென்னையில் அரசியல் மாநாடு நடைபெற உள்ளது. இதுகுறித்து  சிறுபான்மை நல உரிமைப் பிரிவுச்செயலாளர்  மஸ்தான் எம்.பி. அறிக்கை வெளியிட்டுள்ளார். 

தமிழக சட்டமன்ற தேர்தல் களம்  சூடுபிடித்துள்ளது. இதையொட்டி, திமுக தீவிரமான பிரசாரங்களை முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக,  சிறுபான்மையினர் வாக்குகளை பெறும் வகையில்,  திமுக சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு சார்பில் வரும் 6-ம் தேதி சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ திடலில் ‘இதயங்களை இணைப்போம்’  என்ற பெயரில் அரசியல் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ள தமிழகத்தில் உள்ள சிறுபான்மையினர் மற்றும் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. அத்துடன்,  ஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மாநாட்டில்,  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச் செயலாளர் துரைமுருகன், இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், திமுக கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் கே.எம்.காதர்மொகிதீன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.

திமுக கூட்டணியில் ஏற்கனவே  இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை உள்ளன.  மேலும், தற்போது, எஸ்டிபிஐ திமுக கூட்டணியில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளது.

அதுபோல, ஹைதராபாத் எம்.பி. அசாதுதீன் ஒவைசி தலைமையிலான ஏஐஎம்ஐஎம் கட்சியும் தமிழகத்தில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது. அதையும் தங்களது அணிக்கும் அழைக்கும் நோக்கில்,  மாநாட்டில் பங்கேற்க அசாதுதீன் ஒவைசிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து  திமுகழக சிறுபான்மை நல உரிமைப் பிரிவுச்செயலாளர் Dr. மஸ்தான் எம்.பி. விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சிறுபான்மை நல உரிமைப் பிரிவின் சார்பில் எங்கள் கழகத் தலைவரை வைத்து பொதுக்கூட்டம் நடத்துவது வழக்கமான ஒன்று. அந்த அடிப்படையில் இந்த ஆண்டு அப்படியொரு கூட்டம், வருகின்ற 6.1.2020 அன்று சென்னை இராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் கழகத் தலைவர் அவர்களது தலைமையில் நடைபெற உள்ளது.
இந்தப் பொதுக்கூட்டத்திற்கு எப்போதும் போல் தி.மு.க.வின் தோழமை கட்சித் தலைவர்கள் மட்டுமே சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டிருக்கிறார்கள். மற்றபடி தொலைக்காட்சிகளில் வருவது போன்ற செய்தி உண்மையில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.