சென்னை:

திமுக எம்எல்ஏ பெரியகருப்பன் மீது நடவடிக்கை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர்நீதி மன்றம் மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியைச் சேர்ந்த கண்ணன் என்பவர், மதுரை உயர்நீதிமன்ற கிளையில்  தாக்கல் செய்த புகார் மனுவில்,” சிவகங்கை மாவட்டத்தில் வசித்து வரும் யாதவர் சமூகத்தை சேர்ந்த ஒரு பெண்ணிடம், அரசு  வேலை வாங்கி தருவதாக கூறி தவறாக நடந்து கொண்ட வீடியோக்கள் ஊடகங்களில் வெளியாகின. இதுதொடர்பாக கேள்வி எழுப்பியதால், எங்கள் குடும்பத்தை கொலை செய்துவிடுவதாக மிரட்டி வருகிறார். ஆகவே எனது குடும்பத்திற்கு காவல்துறையினர் பாதுகாப்பு வழங்கவும், தனது பதவி பலத்தை தவறாக பயன்படுத்தும் எம்எல்ஏ பெரியகருப்பன் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட என்று கூறியிருந்தார்.

இந்த மனுமீதான விசாரணை  நீதிபதி பாரதிதாசன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இல்லை என்று தெரிவித்தனர். இதையடுத்து,  மனுதாரர் மனுவை திரும்பப் பெறுவதாக தெரிவித்தார். அதைத் தொடர்ந்து நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.