சென்னை:

மார்ச் 9 அன்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என்று திமுக கொறடா சக்ரபாணி அறிவித்து உள்ளார்.

திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் வரும் 9-ம் தேதி திங்கட்கிழமை காலை 11 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்க உள்ளதாக சட்டப்பேரவை திமுக கொறடா சக்ரபாணி அறிவித்துள்ளார்.

இதுபோன்ற அறிவிப்புகள் பொதுவாக பொதுச்செயலாளர் பெயரில் வெளியாகும் நிலையில், தற்போது அவர் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால், திமுக கொறடா இதற்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.

சட்டமன்ற கூட்டத்தொடர் மார்ச் 9 திங்கட் கிழமை காலை தொடங்குகிறது. அன்று காலை மறைந்த முன்னாள், தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்துடன் கூட்டம் நிறைவுப்பெறுகிறது.

இதையடுத்து 11-ம் தேதியிலிருந்து ஏப் 9-ம் தேதி வரை மானிய கோரிக்கைக்கான கூட்டம் நடக்கிறது. தமிழக அமைச்சர்களுக்கு கீழ் வரும் துறைகளுக்கான மானியக்கோரிக்கை மீதான விவாதம், பதிலுரை என கூட்டம் நடக்கும்.

இந்தக்கூட்டங்களில் விவாதம் செய்வதற்கான முன் தயாரிப்பு மற்றும் தமிழகத்தில் தற்போதுள்ள அரசியல் சூழல், போராட்டங்கள் உள்ளிட்டவற்றில் சட்டப்பேரவையில் செயல்பாடு குறித்த ஆலோசனை கூட்டமாக இது இருக்கும் என்று கூறப்படுகிறது.