சென்னை: ஒவ்வொரு மாதமும் மின் கணக்கீடு எடுக்க வேண்டும் என்று திமுக எம்பி கனிமொழி கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த சில வாரங்களாக மின்கட்டணம் அதிகளவில் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. திரையுலகத்தை சேர்ந்தவர்கள் இது குறித்து அதிருப்தி தெரிவித்து இருந்தனர்.
இந் நிலையில், 2 மாதங்களுக்கு ஒருமுறை மின்கணக்கீடு செய்வதற்கு பதில் ஒவ்வொரு மாதமும் மின்கணக்கீடு எடுக்க வேண்டும் என்று திமுக எம்பி கனிமொழி கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறி இருப்பதாவது:
பன்மடங்கு மின்கட்டண உயர்வால் மக்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். இந்த அளவுக்கு மின் கட்டணம் உயர்ந்தது என்ற கேள்விக்கே சரியான விளக்கம் கிடைக்கவில்லை. மின்கட்டணத்திற்கான அவகாசத்தையும் வழங்க மறுத்து அதிமுக அரசு மக்களை வஞ்சிக்கிறது.
இத்தகைய பிரச்னைகள், குழப்பங்கள் ஒவ்வொரு மாதமும் மின்கணக்கீடு செய்வது தான் தீர்வாக அமையும். கடந்த 2016ம் சட்டபேரவை தேர்தல் அறிக்கையிலேயே திமுக முன் வைத்தது. இதன்மூலம் பொதுமக்களின் மின்கட்டண சுமையை தவிர்க்க முடியும். எனவே, அதிமுக அரசு இத்திட்டத்தை செயல்படுத்த முன்வர வேண்டும் என்று கூறி உள்ளார்.