டெல்லி:

மிழகத்தின் தீர்க்கப்படாமல் உள்ள முக்கிய பிரச்னைகளை தீர்க்க வலியுறுத்தி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள கோரிக்கை மனுவை திமுக எம்.பிக்கள் பிரதமர் மோடியை சந்தித்து இன்று வழங்கினர்.

16 கோரிக்கைகளை வலியுறுத்தி தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதிய கோரிக்கை மனுவை, அவர்  சார்பில் திமுக எம்.பி.க்கள் பிரதமரிடம் வழங்கினர்.

அந்த மனுவில்,  தமிழகத்தில் நிலவி வரும் பிரச்னைகள் குறித்தும், அதை உடனே நிவர்த்தி செய்ய  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

குறிப்பாக, நீட் விலக்கு, மேகதாது அணை, விவசாயிகள் பிரச்னை, மத்திய அரசு வேலையில் தமிழக மக்களுக்கு இட ஒதுக்கீடு, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இடம்பெற்றுள்ளன.

தி.மு.க மக்களவைக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில்,  துணைத் தலைவர் கனிமொழி, மாநிலங்களவை தி.மு.க தலைவர் திருச்சி சிவா உள்ளிட்டோர் பிரதமர் மோடியை நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்.

இதுகுறித்து செய்தியளார்களிடம் பேசிய திருச்சி சிவா எம்.பி. “நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்களிக்க வேண்டும்; மாநில உரிமையை நிலைநாட்டும் வகையில் அரசியலமைப்பில் மாற்றம் வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அந்த மனுவில் இடம்பெற்று இருப்பதாகவும்,  சேலம் உருக்காலையை தனியார் மயமாக்கும் முடிவைக் கைவிட வேண்டும்; எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்கவும், தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும் என்பது உள்ளிட்ட நீண்டகால கோரிக்கைகள் மனுவில் குறிப்பிடப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும்,  தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட விவசாயிகளை பாதிக்கும் திட்டங்களை கைவிட வேண்டும்; முல்லைப்பெரியாறு, மேகதாது, தென்பெண்ணை போன்ற நதிநீர் பங்கீட்டு விவகாரத்தில், தமிழகத்தின் உரிமை நிலைநாட்டப்பட வேண்டும் எனவும் பிரதமருக்கு தி.மு.க கோரிக்கை விடுத்துள்ளது.” என கூறினார்.