சென்னை,
ரும் 28ந்தேதி (திங்கட்கிழமை) மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு ‘பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம்’ நடத்தி  திமுக அழைப்பு விடுத்துள்ளது.
மத்திய அரசை கண்டித்து மத்திய அரசு அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக தலைவர் கருணாநிதி அறிவித்து உள்ளார்.
கடந்த 8ந்தேதி மத்திய அரசு ரூ.500,1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததில் இருந்து இன்று வரை மக்கள் பணத் தட்டுபாடுக்கு ஆளாகி வருகின்றனர். அன்றாட வாழ்க்கை நடத்தவே மக்கள் சிரமப்பட்டு வரும் நிலை நாடு முழுவதும் உருவாகி உள்ளது.
எனவே, மத்தியஅரசின் அறிவிப்பை கண்டித்து, மத்திய அரசு அலுவலகம் முன்பு வரும் 28ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும், அதற்கு கழக தோழர்கள்  ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று அறிவித்து உள்ளார்.
karunanidhi2
இதுகுறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி முன்னேற்பாடு எதுவுமின்றி, திடீரென அறிவித்து 16 நாட்களாகியும், பணத் தட்டுப்பாடு பிரச்சினை சிறிதும் தணிந்த பாடில்லை. விளிம்பு நிலை, ஏழை எளிய, நடுத்தர வகுப்பினர், விவசாயிகள், மீனவர், நெசவாளர்கள், சிறு வணிகர்கள் போன்றோர் அனுபவிக்கும் தொல்லைக்கும் துன்பத்திற்கும் அளவில்லை.
அத்தியாவசிய பொருள்கள் கூட வாங்க முடியாத நிலையில், பொதுமக்கள் வங்கிகள் மற்றும் ஏ.டி.எம். வாசல்களில் பல மணிநேரம் காத்துக் கிடக்கின்றனர். அவர்களில் இதுவரை 75 பேர் மரணமடைந்த சோகமும் அரங்கேறியிருக்கிறது.
பிரதமர் மோடியின் பிடிவாதத்தினால், கடந்த சில நாட்களாக நாடாளுமன்றம் முடங்கிய நிலையில், இந்தப் பிரச்சினையை மிகவும் தீவிரமாக எடுத்துள்ள எதிர்க்கட்சியினர் அனைவரும் மத்திய அரசுக்கு எதிராக ஓரணியில் நின்று போராடி வருகின்றார்கள்.
பாராளுமன்றத்தில் இந்தப் பிரச்சினையை எழுப்பி வரும் எதிர்க்கட்சிகள், வாக்கெடுப்புடன் கூடிய ஒத்திவைப்புத் தீர்மானம் கொடுத்து அதனை அவையிலே விவாதிக்க வேண்டுமென்றும், கூட்டுப் பாராளுமன்றக் குழு அமைத்து விசாரணை நடத்திட வேண்டுமென்றும் கோரிக்கை வைத்து வலியுறுத்தி வருகின்றன.
மேலும் பாராளுமன்றத்திற்கு வெளியேயும் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி மக்கள் இயக்கத்தை வலுப்படுத்திட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. அதில் முதலாவதாக, பாராளுமன்ற வளாகத்தில் “தர்ணா” போராட்டம் நடத்துவது என்று முடிவெடுத்து, அவ்வாறே நேற்றையதினம் “தர்ணா” போராட்டம் நடந்துள்ளது.
அதில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட  அனைத்துக்கட்சி உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராகப் போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கும்போது, மத்திய அரசின் சார்பில் பதிலளித்த தகவல், ஒலிபரப்புத் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு, டெல்லியில் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது,
“1000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறும் அரசாங்கத்தின் முடிவு எந்த நிலையிலும் வாபஸ் பெறப்பட மாட்டாது. எந்தவொன்றையும் திரும்பப் பெறுவது என்பது மோடியின் ரத்தத்திலேயே கிடையாது” என்று எரியும் நெருப்பில் எண்ணெய் வார்த்திடும் வகையில் கூறியிருப்பது, “ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் போடுவது” போன்ற இறுக்கமான சூழ்நிலையைத் தான் ஏற்படுத்தியுள்ளது.\
kanurhati2
மத்திய அரசின் இந்தக் கடுமையான நிலை குறித்து நேற்றையதினம் “தர்ணா” போராட்டத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் வரும் 28-ந்தேதி நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்து அறிவித்துள்ளார்கள்.
தி.மு.க.வை பொறுத்த வரையில் வரும் 28-ந் தேதியன்று அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும், மத்திய அரசு அலுவலகங்களின் முன்னால் மாவட்டக் கழகச் செயலாளர்கள் தலைமையில் “பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம்” நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அனைத்துப் பிரிவு மக்களின் ஒத்துழைப்புடன், கழகத் தோழர்கள் அனைவரும் அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு, மத்திய பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத முடிவுக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டுமென்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.