சென்னை: வள்ளுவரை, காவிக்கூட்டம் தனது கட்சிக்கு கச்சை கட்டத் துணைக்கு அழைப்பது தமிழ்த் துரோகம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்து உள்ளார்.

கடந்த 1ம் தேதியன்று, தமிழக பாஜகவின் டுவீட் பதிவில் ஒரு செய்தி வெளியாகி இருந்தது. அதில், திருவள்ளுவருக்கு காவி உடை அணியப்பட்டு இருந்தது. மேலும் அந்த பதிவில், கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன், நற்றாள் தொழாஅர் எனின் என்று இருந்தது.

மேலும், கடவுளை தூற்றி, இறைநம்பிக்கை கொண்டவர்களை பழிப்பவர்களுக்கு, அவர்கள் கற்ற கல்வியினால் என்ன பயன்? என்று கேட்கப்பட்டு இருந்தது.

தமிழக பாஜகவின் டுவீட்டுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவீட்டில் கூறி இருப்பதாவது:

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வள்ளுவரை, காவிக்கூட்டம் தனது கட்சிக்கு கச்சை கட்டத் துணைக்கு அழைப்பது தமிழ்த் துரோகம்! எத்தனை வர்ணம் பூசினாலும், உங்கள் வர்ண சாயம் வெளுத்துவிடும்.சாயம் பூசுவதை விடுத்து, திருக்குறள் படித்து திருந்தப் பாருங்கள் என்று விமர்சித்துள்ளார்.