சென்னை:

சென்னை கொளத்தூரில் செய்தியளார்களிடம் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக உள்ளாட்சி தேர்தலை நிறுத்தியதாக நீதிமன்றம் சொல்லவில்லை என்றும், சட்டத்தை மீறி விதிகளுக்கு அப்பாற்பட்டு தேர்தல் நடத்தும் சூழல் வந்தால் கூட அதை சந்திப்பதற்கு திமுக தயாராக உள்ளது என்று கூறினார்.

தமிழகத்தில் அடுத்த மாதம் இறுதியில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், வார்டுகள் சரிவர பிரிக்கப்படவில்லை என்று கூறி, உள்ளாட்சி தேர்தலுக்கு தடை கேட்ட திமுக உச்சநீதி மன்றத்தில் மனு செய்துள்ளது.

இந்த விவகாரம் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தனது தொகுதியான கொளத்தூர் தொகுதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பல்வேறு பணிகளை மேற்பார்வையிட்டு, பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின்னர், செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் ஸ்டாலின் கூறியதாவது,

“உண்மையைத் திரும்ப திரும்ப சொன்னால், அது உண்மை என ஏற்றுக் கொள்ளலாம், ஆனால் பொய்யை திரும்ப திரும்ப சொல்லி வருகிறார் எடப்பாடி பழனிசாமி  என்று குற்றம் சாட்டியவர்,.   உள்ளாட்சி தேர்தலை நிறுவத்துவதற்கு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி பல்வேறு திட்டங்களைப் போட்டு வருகிறது. அதற்காக பலரை மறைமுகமாக நீதிமன்றத்திற்கு அனுப்பி கொண்டிருக்கிறார்கள்.

கடந்த 3 வருடமாக இந்த பிரச்சினை நடந்து கொண்டிருக்கிறது. திமுக சார்பில் கடந்த 3 ஆண்டு களாக ஆலந்தூர் பாரதி நீதிமன்றத்திற்கு சென்று “தேர்தலை எந்த காரணத்தை கொண்டும் நிறுத்தக் கூடாது. நடத்தியே தீர வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்.

உயர் நீதிமன்ற உத்தரவுப்படி வார்டு வரையறையை முறைப்படுத்த வேண்டும் என்றும்,  புதிய மாவட்டங்களில் வார்டு வரையறை பணிகளை மேற்கொள்ளவில்லை. அடுத்தது பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சியின் பட்டியலின, பழங்குடியின பெயர்கள் ஒதுக்கீடு செய்யப்பட வில்லை.
இவற்றையெல்லாம் முறைப்படுத்தி அரசு முறையாக தேர்தல் நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது. ஆனால் இவற்றையெல்லாம் நிறைவேற்றி உள்ளார்களா என்பது என்னுடைய கேள்வி.

12,500-க்கும் மேற்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில் கூட்டத்தை கூட்டியவர்கள் நாங்கள். இந்த அரசு கூட்டவில்லை. எதிர்கட்சியாக இருக்கும் திமுக தான் கூட்டி, அங்குள்ள பிரச்சினைகளை நாங்கள்தான் கேட்டுள்ளோம். மனுக்களும் நாங்கள்தான் பெற்றுள்ளோம். ஆகவே தேர்தல் நடத்த வேண்டும் என நாங்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம்.

ஒருவேளை சட்டத்தை மீறி விதிகளுக்கு அப்பாற்பட்டு தேர்தல் நடத்தும் சூழல் வந்தால் கூட அதை சந்திப்பதற்கு திமுக தயாராக உள்ளது.