சென்னை: முதுநிலை மருத்துவப் படிப்புகள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு கலைஞர் என்றும் சரி என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியிருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் கூறி உள்ளார்.

கிராமங்கள், மலைவாழ் பகுதிகளில் பணி செய்யக்கூடிய இளம் அரசு மருத்துவர்களுக்கு மருத்துவ உயர்படிப்பில் சிறப்பு இட ஒதுக்கீட்டினை தமிழக அரசு வழங்கி வருகிறது. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மனுவை விசாரித்த நீதிமன்றம், மருத்துவ உயர் படிப்பில் அரசு மருத்துவ மாணவர்களுக்கு மாநிலங்கள் சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கலாம், அதை  தடுக்க இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு அதிகாரம் கிடையாது என்று தீர்ப்பு அளித்தது.

2007ல் கழக ஆட்சியில் முத்தமிழறிஞர் வழங்கிய சமூகநீதி இது என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வரவேற்றுள்ளார். இதுகுறித்து அவர் தமது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:

முதுநிலை மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவ மாணவர்களுக்கு மாநில அரசுகள் #Reservation வழங்கலாம் என்ற #SupremeCourt-ன் தீர்ப்பு #கலைஞர்_என்றும்_சரி என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறது. 2007ல் கழக ஆட்சியில் முத்தமிழறிஞர் வழங்கிய சமூகநீதி இது! மாண்புமிகு நீதிபதிக்கு நன்றி! என்று தெரிவித்துள்ளார்.