திருச்சி: தேர்தல் அதிகாரிகளை மிரட்டியது தொடர்பாக திமுக முதன்மை செயலாளரும், திருச்சி மேற்கு தொகுதி திமுக வேட்பாளருமான கே.என்.நேரு, மதுரை உயர்நீதிமன்ற கிளையில் முன்ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த 6ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. முன்னதாக கடந்த 4ந்தேதி 7 மணிக்கு தேர்தல் பிரச்சாரங்கள் முடிந்த நிலையில், விதிகளை மீறி, கேஎன்.நேரு வாட்ஸ் அப்-ல் பேசியதாக அதிகாரிகள் புகாரளித்தனர். மேலும், வாக்காளர்களுக்கு பணம்  கொடுத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

இதுகுறித்து விசாரணை நடத்தச் சென்ற  தேர்தல் அதிகாரிகளை கேஎன்.நேரு தரப்பில் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் முசிறி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில்,  கே.என்.நேரு மீது முசிறி போலீசார், 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில், கே.என்.நேரு சார்பில் மதுரை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.