டில்லி,

 71வது பிறந்த நாள் கொண்டாடும் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியருப்பதாவது,

இந்திய விடுதலைக்காகப் பாடுபட்ட – தியாகங்கள் பலபுரிந்த பாரம்பரியப் பெருமைமிக்க காங்கிரஸ் பேரியக்கத்தின் தலைவர் அன்னை சோனியா காந்தி அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை, தலைவர் கலைஞர் அவர்கள் சார்பிலும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.

நாட்டின் பன்முகத்தன்மை, சமூக நல்லிணக்கம், சமூகநீதி மற்றும் ஜனநாயக அடிப்படை ஆகியவற்றைப் பாதுகாத்து, செழுமைப்படுத்தி மேலும் முன்னெடுத்துச் செல்வதற்குத் தொடர்ந்து பாடுபட்டு வரும் பெருமைக்குரிய அன்னை சோனியா காந்தி அவர்கள், உலக அரங்கில் இந்தியா தனிச் சிறப்பை நிலைநிறுத்திக் கொள்வதற்காக, மதச்சார்பற்ற, சோஷலிச-ஜனநாயக சக்திகள் அனைத்தையும் ஒருங்கிணைக்கும் திறன் வாய்த்திடப் பெற்ற தலைவராகத் திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

தலைவர் கலைஞர் அவர்களின் கோரிக்கையினை ஏற்று,தமிழுக்குச் செம்மொழி அந்தஸ்து கிடைப்பதற்கு உறுதுணையாக இருந்த அன்னை சோனியா காந்தி அவர்கள், முழுமையான ஆரோக்கியத்துடனும் நிறைவான மகிழ்வோடும் மேலும் பல்லாண்டு வாழ வேண்டும் எனவும், நாட்டின் முன்னேற்றத்திற்காகவும், ஏழை எளிய நடுத்தர மக்களின் நலனுக்காகவும் தொடர்ந்து பாடுபட வேண்டும் எனவும் இதய பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு ஸ்டாலின் கூறி உள்ளார்.