சென்னை: யூடியூப் சேனலில் அவதூறு கருத்துக்களை பதிவிட்ட மதன் ரவிச்சந்திரனுக்கு எதிராக தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், சைதை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
அண்மைக்காலமாக யூட்யூப் நடத்தி வரும் பிரபலங்கள் சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வது தொடர் கதையாகி வருகிறது. கந்த சஷ்டி விவகாரம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் வீடியோ வெளியிட்டதாக கூறி கறுப்பர் கூட்டம் யூட்யூப் சேனல் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.
அந்த சேனலில் உள்ள வீடியோக்களும் முற்றிலும் நீக்கப்பட்டன. யூட்யூப் சேனல் பிரபலம் மாரிதாஸ் மீது வழக்கு பதிவானது. இந் நிலையில் தற்போது யூட்யூப் சேனலில் தம்மை குறித்து அவதூறுகளை பரப்பியதாக மதன் ரவிச்சந்திரன் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த அவதூறு வழக்கில், மதன் ரவிச்சந்திரன் என்பவர் தனது சேனல் விஷன் எனும் யூடியூப் சேனலில், மான்கறி vs உதயநிதி ஸ்டாலின்/ திருப்போரூர் துப்பாக்கி சூடு என்ற தலைப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், தனக்கும், தனது குடும்பத்தாரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளது. எனவே தன்னைப் பற்றி உண்மைக்கு புறம்பாக மக்கள் மத்தியில் அவதூறு செய்தி பரப்பும் மதன் ரவிச்சந்திரன் மீது இந்திய தண்டனை சட்டம், அவதூறு சட்டப் பிரிவின் கீழ் விசாரித்து, கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.