நியூயார்க்,

அமெரிக்காவில் காதல்மன்னனாக  விளங்கிய போஸ்ட்மேன் ஒருவருக்கு 1300 குழந்தைகள் பிறந்திருப்பது  ஊர்ஜிதமாகியுள்ளது.

அமெரிக்காவில் டென்னஸ்ஸி மாகாணத்தின் தலைநகர் நாஷ்வெல்லியை சேர்ந்தவர் அந்த போஸ்ட்மேன். (பெயர் குறிப்பிடாமல் போட்டோ மட்டும் வெளியிடப்பட்டுள்ளது) 1960களில் நாஷ்வெல்லே நகரில் போஸ்ட் மேனாக பணியாற்றி வந்தார். தற்போது 87 வயதாகும் இவருக்கு 1000க்கும் அதிகமான குழந்தைகள் இருப்பதாக சில ஆண்டுகளுக்கு முன் சர்ச்சை எழுந்தது.

நாஷ்வெல்லே நகரில் இந்தவிவகாரம் குறித்து பேசாத நபர்களே யாரும் இல்லை. இது உண்மைதானா என கண்டறிய சித் ராய் என்பவர் 15 வருடங்களாக பல்வேறு டி என் ஏ சோதனைகளையும் , ஆயிரக்கணக்கான ஆவணங்களையும் ஆய்வு செய்தார். ஆய்வு முடிந்த நிலையில் நேற்று அந்த அறிக்கையை  வெளிப்படையாக அறிவித்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  கடந்த 2001ம் ஆண்டு ஒரே மாதிரி தோற்றத்தில் இருந்த வெவ்வேறு ஊர்களைச் சேர்ந்த இரு நபர்கள் தன்னிடம் வந்து தங்களது உண்மையான தந்தை யார் என கண்டுபிடித்துத் தாருங்கள் என கேட்டதாகவும் அதையடுத்து, தான்மேற்கொண்ட டி என் ஏ ஆய்வில் அந்த இருவரும் ஒரே தந்தைக்குப் பிறந்தவர்கள் என்ற விசயம் தெரியவந்ததாக கூறினார்.

 

இந்த விசயத்தை வெளியில் தெரிவித்து விட வேண்டாம் என்றும் தன்னிடமிருந்த ஆதாரங்களை அவர்கள் வாங்கிச் சென்று விட்டதாகவும் கூறினார். இதையடுத்து டி என் ஏ சோதனையில் தீவிரமாக இறங்கிய பிறகுதான் அந்த போஸ்ட்மேன் தீராத விளையாட்டுப் பிள்ளையாக இருந்துள்ளார் என்ற விசயம் தெரியவந்தது.  ஆரம்பத்தில் அதை தன்னால் நம்பமுடியவில்லை என தெரிவித்த ராய், போஸ்ட்மேனிடம் உரையாடிய பிறகுதான் அவர் பெண்களை கவர்வதில் பயங்கர கில்லாடி என தெரிந்து கொண்டதாக கூறினார்.

தாங்கள் யாருக்குப் பிறந்தோம் என ரகசியம் தெரிந்ததும் யாரும் அந்த போஸ்ட்மேன் மீது வழக்குத் தொடர எண்ணவில்லை. இந்த உண்மை வெளியில் தெரிந்தால் பல குடும்பங்கள் நொறுங்கிவிடும்.   இத்தனை ஆண்டுகள் தான், நடத்திய ஆய்வுகள் அர்த்தம் இல்லாமல் போய்விடும் என்று   அவர் தெரிவித்தார்.

தன்னுடைய ஆராய்ச்சிப்படி பார்த்தால்  போஸ்ட்மேனுக்கு நிச்சயமாக 1300 க்கும் அதிகமாகவே குழந்தைகள் இருக்கும் என்றும்  அவர் அதிர்ச்சியளித்தார்.

இது குறித்து போஸ்ட்மேனிடமே கேட்டுவிடலாம் என அவரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, 1960கள் தன் வசந்தகாலம், அப்போது நடந்த காம லீலைகளை மறைக்க விரும்பவில்லை என்றார்.

அப்போதெல்லாம் கருத்தடை செய்யும் வசதி பரவலாக இல்லை என்று கூறிய அவர், அப்போது மேடைகளில் பாடிக் கொண்டிருந்ததாகவும் தன்னுடைய தோற்றமும், பாடல்பாடுவதும் அன்றைய பிரபல பாடகரும், டான்ஸருமான ஜானி கேசைப்போலவே இளம்பெண்களுக்குத் தெரிந்ததாக கூறினார்.

அதனால்தான் பல பெண்களுடன் உறவு ஏற்பட்டதாக சிரித்துக்கொண்டே கூறுகிறார். அந்தப் பெண்கள் எல்லாம் தன்னை ஜானி கேஷ்-ஆக நினைத்திருக்கலாம் அல்லது தன்னை ஜானி கேஷைப்போல் நினைத்து அந்தப் பெண்கள் ஆறுதலடைந்து இருக்கலாம் என்று தன் நெற்றியை சுருக்கியபடி கூறினார் அவர்.

மன்மதனாகவும் காதல் மன்னனாகவும் ஆயிரக்கணக்கான பெண்களின் நாயகனாகவும் விளங்கிய போஸ்ட்மேன் பற்றிய புத்தகம் ஒன்று விரைவில் வர உள்ளது. அதை எழுதப்போகிறவர் வேறு யாருமில்லை, போஸ்ட் மேனின் டிஎன் ஏ வை ஆய்வு நடத்திய சித் ராய்தான்.

போலியான ஜானி கேஷே காதல் மன்னனாக இருந்திருந்தால், உண்மையான ஜானி கேஷ்! …. மாமன்னன்தான்!…

அதுசரி..

நம் ஊரில் மட்டுமே தியாகராஜ பாகவதர்கள் இருக்கவேண்டும் என்ற நிர்பந்தம் ஏதாவது உள்ளதா…என்ன..!

இனிமையான குரல்வளம் காலம் காலமாக பெண்களை வசீகரித்துக் கொண்டுதான் உள்ளது.