விஜயவாடா

கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதற்காக மதங்களைக் குறை கூற வேண்டாம் என ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்தியாவில் கொரோனா பரவுதலைத் தடுக்க நாடெங்கும் தேசிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.   வெளியில் யாரும் நடமாடாமல் இருக்கவும், அதிகம் கூட்டம் கூடுவதைத் தவிர்க்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.   ஆயினும் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதற்கு முக்கிய காரணம் கடந்த மாதம் நிஜாமுதீனில் நடந்த தப்லிகி ஜமாத் மாநாடு எனக் கூறப்படுகிறது.   இப்போது இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்படைந்தோரில் பெரும்பாலானோர் இந்த மாநாட்டில் கலந்துக் கொண்டவர்கள் மற்றும் அவர்களுக்குத் தொடர்புடையவர்கள் ஆவார்கள்.

தப்லிகி ஜமாத் உறுப்பினர்கள்  மற்றும் அவர்களுக்குத் தொடர்பு உடையோரைக் கண்டறிந்து தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.   நாட்டில் பலரும் இஸ்லாமியர்கள் மீது கொரோனா  பரப்புவதாகக் குறை கூறி வருகின்றனர்.

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, “கொரோனா வைரஸ் அனைவரையும் தாக்கும்.  அது மதம், ஜாதி, ஏழை, பணக்காரனென வித்தியாச்ட்ம் பார்க்காது. நாமும் அதைப் பின்பற்ற வேண்டும்.  நிஜாமுதீனில் நடந்த நிகழ்வு துரதிருஷ்டவசமானது தான்.  ஆனால் அதற்காக ஒரு சமுதாயத்தினரை குறை கூறுவது ஏற்க முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.