விவசாயம் சரியில்லை என்று வெறும் கோபத்துடன் இளைஞர்கள் அரசியல் களத்திற்கு வராதீர்கள் என நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் அட்வைஸ் கொடுத்துள்ளார்.

சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு பேசிய மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், “நடிகர்கள் என்பவர்கள் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வந்து செல்பவர்கள் தான். அப்துல்கலாமுக்கு சமாதி கட்ட நாங்கள் வரவில்லை, அவரை எல்லாருடைய நெஞ்சிலும் கொண்டு செல்ல வேண்டும் என முயற்சி செய்து வருகிறோம். தலைவர் என்று சொல்வதில் அகந்தை உள்ளது தோழர் என்று சொல்லும்போது தொடர்ச்சி உள்ளது.

முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன், யார் வந்தாலும் இருக்க வேண்டும். முதலமைச்சரானால் முதல் கையெழுத்து என்பது குறுகியகால விஷயம், நான் நீண்டகால தீர்வு சொல்கிறேன். விவசாயம் சரியில்லை என்று வெறும் கோபத்துடன் இளைஞர்கள் அரசியல் களத்திற்கு வராதீர்கள், முறையான பயிற்சி பெற்று விவசாயத்தை காக்க இளைஞர்கள் முன்வர வேண்டும். மாணவர்கள் ஏன் இன்னும் அரசியலில் ஈடுபடாமல் இருக்கிறீர்கள்? கலாம் கண்ட கனவை நனவாக்க, மாற்றத்தை நிகழ்த்த மாணவர்கள் அரசியலுக்கு வாருங்கள், வரவேற்பேன்.

புத்தரும், கலாமும் ஒன்றுதான் நாம் தான் வெவ்வேறாக நினைத்து பேசிக் கொண்டிருக்கிறோம். அப்துல்கலாமிடம் 3 மணி நேரம் பேசியது என் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தியது. கல்வியின் பின் மாணவர்கள் ஒரு மந்தையாக செல்லக்கூடாது கற்பது என்பதை விட புரிவது என்பதே கல்வி” என்று தெரிவித்தார்.