ராமண்ணா வியூவ்ஸ்:
ராமண்ணா
ராமண்ணா
 
என் பால்ய நண்பன் சேகர்.  கோடை விடுமுறைக்கு குடும்பத்தோடு சென்னை வந்திருந்தான்.  பேசிக்கொண்டிருக்கையில், “தேர்தல் நடத்தாமலேயே ஆட்சி அமைக்க ஒரு வழி இருக்கு. புரட்சிகரமான திட்டம்” என்றான், ஆர்வமும், குழப்பமுமாக “என்ன திட்டம்” என்றேன்.
சேகர் சொன்ன ஐடியா:
“தேர்தலுக்காக ஆயிரமாயிரம் கோடி ரூபாய்கள் செலவாகிறது. தேர்தல் அன்று கட்டாய விடுப்பு என்பதால் ஏற்பட்ட இழப்பு மேலும் சில லட்சம் கோடி இருக்கும்.
 
இத்தனை செலவு செய்து என்ன மாற்றம் வந்துவிடப்போகிறது?
 
“யார் ஆட்சிக்கு வருவது என்பதை, பெருமுதலாளிகள்தான் தீர்மானிக்கிறார்கள்” என்கிறார்கள்.
 
தவிர, எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஊழல் நடக்கத்தான் போகிறது. மக்கள் பணம் கொள்ளை போகத்தான் போகிறது.
 
ஆகவே ஐந்து வருடத்துக்கு ஒரு முறை நாட்டை (வெளிப்படையாக) ஏலம் விடலாம். எந்தக் கட்சி அதிகத் தொகை கொடுக்கிறதோ அதற்கு ஆட்சி உரிமையைத் தந்துவிடலாம். இப்போதுபோல அப்போதும் ஆர்வமாக பெரும் தொழிலதிபர்கள் தேர்தல் நிதி கொடுக்கத்தான் போகிறார்கள்.
 
இதில் பல நன்மைகள் உள்ளன.
 
காதை அடைக்கும் பிரச்சார அலறல், ஊர்வலம் பொதுக்கூட்டம் என்ற டீசல் செலவு, நெரிசல், வெய்யிலில் காயும் மக்கள், குப்பையாகும் நோட்டீஸ், போஸ்டர்கள், விவாதம் என்ற பெயரில் தொ.கா. மண்டையிடி… இப்படி எல்லாவற்றிலிருந்தும் மக்களுக்கு விடுதலை கிடைக்கும்.
 
சாதி,மத பிரச்சினையை கிளப்பி மோதலை ஏற்படுத்துவது, கட்சி சார்பிலான அடிதடி எதுவும் இருக்காது.
 
முக்கியமாக, தேர்தலால் அரசுக்கு செலவ ஆவது போய், வருமானம் கிடைக்கும்.
 
“கட்சிகள் கொடுக்கிற் காசு போயிடுமே” என்று பல வாக்காளர்கள் வருந்தக்கூடும். அதற்கும் ஒரு நல்ல தீர்வு இருக்கிறது. ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை “தேர்தல் இல்லா போனஸ்” என்று தலைக்கு ஐநூறு ரூபாய், ரேசன் கடைகள் மூலமோ வங்கி மூலமோ கொடுத்துவிடலாம்.
 
இதனால், “எங்க பகுதிக்கு பணம் வரலை” “எங்களுக்கு கொறைச்சு கொடுத்துட்டாங்க” என்பது போன்ற மனக்குறைகள் மக்களுக்கு வராது. அரசில்வாதிகளுக்கும் அலைச்சல், பொய் சொல்லும் டென்சன்.. எதுவும் கிடையாது.
 
எல்லோருக்கும் நன்மை அளிக்கும் இத்திட்டத்தை ஏன் அமலாக்கக்கூடாது?”
– சேகர் சொன்னதைக் கேட்டு எனக்கு தலை கிறு கிறு என்ற வந்தது.. உங்களுக்கு?