ஐதராபாத்:

பிரபல நடிகை தமன்னா மீது செருப்பு வீசிய இளைஞர்கைது செய்யப்பட்டார்.

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகை தமன்னா. தமிழில் ‘பாகுபலி’, ‘பையா’, ‘அயன்’ உள்ளிட்ட பல்வேறு வெற்றிப்படங்களில் நடித்துள்ள இவர், சமீபத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான ‘ஸ்கெட்ச்’ படத்திலும் நடித்திருக்கிறார்.

இந்த நிலையில் ஐதராபாத்தின் ஹிம்யாத் நகரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நகைக்கடை ஒன்றை  திறந்துவைக்க நேற்று சென்றார்.  அப்போது  கூட்டத்தில் இருந்த இளைஞர் ஒருவர், தமன்னாவை நோக்கி தனது காலணியை வீசினார்.  அது தமன்னாவுக்கு அருகில் நின்றிருந்த கடை ஊழியர் மீது பட்டது.

உடனே அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த காவல்துறையினர், காலணி வீசிய அந்த இளைஞரை பிடித்து விசாரணை நடத்தினர்.   அவரது பெயர் கரிமுல்லா என்றும், முசீராபாத்தை சேர்ந்த அவர் பொறியாளர் என்றும் தெரியவந்தது.

நடிகை தமன்னா  நடித்த சமீபத்திய படங்களில் அவரது கதாபாத்திரங்கள் சரியில்லை என்று அதிருப்தி ஏற்பட்டதால் காலணி வீசியதாக அவர் தெரிவித்தார்.

காவல்துறையினர் அவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இச் சம்பவம் ஐதராபாத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.