சென்னை: பொதுமக்கள் கொரோனா எண்ணிக்கையைக் கண்டு பதற்றப்பட வேண்டாம், அனைவரும் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும், அரசுடன் ஒத்துழைக்க வேண்டும் என்று தமிழக சுகாதாரத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தினார்.

சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் நடிகர் விவேக் தடுப்பூசி போட்டுக் கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சுகாதாரத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

நடிகர் விவேக், அரசுக்கு உதவும் வகையில் பல பிரச்சாரங்களைச் செய்து கொடுத்துள்ளார். இம்முறையும் தடுப்பூசி போட்டுக் கொண்டு பொதுமக்களைத் தடுப்பூசி போட வலியுறுத்தியதற்காக அவருக்குத் தமிழக அரசு சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தில்  கொரோனா நோய் குறித்து நேற்றிலிருந்து தடுப்பூசி திருவிழா தொடங்கியது.   இந்த நேரத்தில்  நாம் செய்யவேண்டியது 45 வயதைக் கடந்த அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். நேற்று மட்டும் 75,000 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டார்கள்.  இன்று 1 லட்சம் பேர் போடுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். எங்களுடைய இலக்கு நாள் ஒன்றுக்கு  2 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என்பதுதான்.

மக்கள் தொற்று பரவலை சாதாரணமாக ஒரு விஷயத்தை எடுத்துக்கொள்ள வேண்டாம். நமக்குத் தொற்று வராது, கூட்டத்தில் முகக்கவசம் இல்லாமல் சென்றாலும் எனக்கு கொரோனா வராது என்கிற எண்ணத்தைக் கைவிட வேண்டும். இந்த தொற்றானது  கண்ணுக்குத் தெரியாமல் பரவும் கிருமி. அது சங்கிலி போன்றது.  அதை உடைக்க வேண்டும் என்றால் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். ஒருவருக்கு வந்தால் 10 பேருக்கு வந்துவிடுகிறது. அந்த சங்கிலையை உடைக்க முடியும்.  நம்மிடம் அருமையான மருத்துவ முறை உள்ளது. தேவையான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு வருகிறது.

மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள் மட்டுமல்ல வயது வரம்பின்றி அனைவருக்கும் தடுப்பூசி போடத் தரவேண்டும் என்று மத்திய அரசிடம் கோரியுள்ளோம். அதற்கு என்று ஒரு கமிட்டி உள்ளது. அதிலும் கோரியுள்ளோம் மழைக்காலம் காரணமாக சூடான உணவுகளை மட்டும் உண்ண வேண்டும். கரோனா மட்டுமல்ல 3 மாதத்திற்குரிய மருந்துகளைத் தயாராக வைத்துள்ளோம்.

மக்கள் மருந்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். ஆனால், ஒத்துழைப்பு தேவை. கூட்டமாக அனைவரும் ஒன்று சேரக் கூடாது. மார்க்கெட், கடைத்தெரு என கும்பலாக ஒன்றுகூடக் கூடாது. பொதுமக்கள் இந்த நேரத்தில் எண்ணிக்கையைப் பார்த்துப் பதற்றமடையாமல்,  வெளியில் செல்லும்போது முகக்கவசம் அணியாமல் இருக்கக் கூடாது.

இவ்வாறு  அவர் கூறினார்.