“சர்ச்சைக்குரிய பேச்சால் பொதுமக்களிடையே அச்சத்தையும், பீதியையும் கிளப்பாதீர்கள்” என்று தமிழக பால்வளத்துறை அமைச்சருக்கு பால் முகவர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.


இது குறித்து  தமிழக பால்வளத்துறை அமைச்சர்  ராஜேந்திர பாலாஜிக்கு, பால் முகவர்கள்  மற்றும் தொழிலாளர்கள் சங்க தலைவர் சு.ஆ.பொன்னுசாமி
எழுதியுள்ள கடிதம்:

“”தனியார் பால் நிறுவனங்கள் அதிக லாபம் கொடுப்பதால் அந்த கம்பெனிகளுக்கு ஆதரவாக பால் முகவர்கள் பேசுகிறார்கள்” என நீங்கள் சொன்னதாக இன்றைய (25.05.2017)  நாளிதழ்கள்சிலவற்றில் செய்தி வெளியாகியுள்ளது.

கடந்த வாரம் மற்றும் நேற்று முன்தினம் மட்டுமே “தனியார் நிறுவனங்கள் பாலில் ரசாயனம் கலப்படம் செய்கின்றன” என மேடையில் நீங்கள் பேசியுள்ளீர்கள். ஆனால் கடந்த 2012ம் ஆண்டில்உச்சநீதிமன்றத்தில் பாலில் கலப்படம் தொடர்பான பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்ட காலத்தில் இருந்து தற்போது வரை தனியார் பால் நிறுவனங்கள் பாலில் கலப்படம் செய்கின்றன.

எனவேஅவற்றை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுங்கள் என ஆறு ஆண்டுகளாக நாங்கள் பேசி வருவது தங்கள் அரசின் செவிகளில் விழாமல் போனதும், அந்த தகவல் தங்களின் கவனத்திற்கு வராமல்போனதும் விந்தையிலும் விந்தையாகவே இருக்கிறது.

“மக்கள் சேவையே மகேசன் சேவை” என அரசியல்வாதிகளாகிய நீங்கள் வேண்டுமானால் மேடைக்கு மேடை வெற்று முழக்கமிடலாம். ஆனால் பால் முகவர்களாகிய நாங்கள் வெயில், புயல்,மழை, வெள்ளம் என எந்த ஒரு இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டாலும், சமூக விரோதிகளால் வன்முறைகள் ஏற்பட்டாலும் இது வரை பொதுமக்களுக்கு பாலினை தங்குதடையின்றி விநியோகம்செய்து வந்திருக்கிறோம்.

அதுமட்டுமன்றி  பால் முகவர்களாகிய எங்கள் இல்லத்தில் எந்த ஒரு சுக, துக்க நிகழ்வுகள் நடைபெற்றாலும் முதலில் பொதுமக்களுக்கு பாலினை தங்குதடையின்றிவிநியோகம் செய்து விட்டு தான் அந்த சுக, துக்க நிகழ்வுகளில் கலந்து கொண்டு “மக்கள் சேவையே மகேசன் சேவை” என்பதை வெறும் வெற்று முழக்கமாக இல்லாமல் செயலால் அதனைநித்தமும் நிருபித்து வருகிறோம்.

மேலும் ஆவின் நிறுவனம் பால் முகவர்களாகிய எங்களுக்கு தாய் வீடாக விளங்கினாலும் எங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடனேயே தொடர்ந்து நடத்தி வந்திருக்கிறது. ஆவின்நிறுவனத்தில் கடந்த காலங்களில் இடைத்தரகர்களுக்கு இருந்த மதிப்பும், மரியாதையும் பொதுமக்களுக்கும், ஆவின் நிறுவனத்திற்கும் இணைப்பு பாலமாக இருக்கும் பால் முகவர்களுக்குகிடைத்ததில்லை, அதுமட்டுமன்றி ஆவின் பாலினை விற்பனை செய்வதால் பால் முகவர்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியமும் கிடைப்பதில்லை.

ஆனால் பால் முகவர்களுக்கு புகுந்த வீடாக விளங்கும் தனியார் பால் நிறுவனங்கள் பால் முகவர்களுக்கு நேரிடையான வர்த்தக தொடர்புகளை கொடுத்து, உரிய அங்கீகாரம் தருவதோடு, பால்முகவர்களின் உழைப்பிற்கேற்ற ஊதியத்தை ஓரளவிற்கேனும் தொடர்ந்து வழங்கி வருகின்றன.

பால் முகவர்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் ஓரளவிற்கேனும் கிடைக்கிறது என்பதற்காகதனியார் பால் நிறுவனங்கள் செய்கின்ற தவறுக்களுக்கெல்லாம் பால் முகவர்களும் சரி, எங்களது தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கமும் சரி எந்தக் காலத்திலும் அவற்றுக்குதுணை போனதில்லை.

இதுவரை தவறு செய்தது ஆவின் நிறுவனமோ அல்லது தனியார் பால் நிறுவனங்களோ எவராக இருந்தாலும் “நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே” என்பதைஆணித்தரமாக இந்த உலகிற்கு எடுத்துரைத்திருக்கிறோம்.

மேலும் தனியார் பால் நிறுவனங்களின் தரத்தை தொடர்ந்து கண்காணிப்பதாகட்டும், அந்நிறுவனங்களுக்கு உரிமம் வழங்குவதாகட்டும், பாலில் ரசாயனம் கலப்படம் செய்கின்ற தனியார் பால்நிறுவனங்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக இருக்கட்டும் இவை அனைத்தும் மத்திய அரசின் உணவு தரக்கட்டுப்பாட்டு துறையின் கீழ் தான் வருகிறது என்பது கூட தெரியாமல்பால்வளத்துறை அமைச்சரான தாங்கள் இருப்பது இந்த துறை சார்ந்த பால் முகவர்களாகிய எங்களுக்கு மிகுந்த வேதனையாக இருக்கிறது.

மேலும் பாலில் கலப்படம் செய்வோருக்கு ஆயுள் தண்டனை வழங்குகின்ற வகையில் அந்தந்த மாநில அரசுகள் சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும் என கடந்த 2013 மே மாதம் உச்சநீதிமன்றம்உத்தரவிட்டும் இது வரை உங்கள் அரசு ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை என்பது *பொதுமக்களில் ஒருவனாக எங்களுக்கு கூடுதல் வேதனையை தந்திருக்கிறது.*

தமிழகத்தின் தினசரி பால் தேவையில் சுமார் 16.4% மட்டுமே ஆவின் பூர்த்தி செய்யும் போது மீதமுள்ள 83.6% பால் தேவைகளுக்கு பொதுமக்கள் எங்கே போவார்கள்? என்பதை நீங்கள் சற்றேசிந்தித்துப் பார்க்க வேண்டும்.

பால் முகவர்களாகிய நாங்கள் மக்கள் நலன் சார்ந்து செயல்பட எப்போதும் தயாராகவே இருக்கிறோம். ஆனால் எங்களை பயன்படுத்திக் கொள்ளவும், மக்கள் நலன் சார்ந்து உரிய நடவடிக்கைஎடுக்கவும் இது வரை தமிழக அரசு தவறி விட்டது,

எனவே இனியாவது தாங்கள் வழிப்போக்கன் போல போகிற போக்கில் பேசி விட்டு மக்கள் மத்தியில் அச்சத்தையும், பீதியையும் உருவாக்காமல்ஆக்கபூர்வமான வழிகளைப் பற்றி சிந்தியுங்கள்.

தமிழக பால்வளத்துறை அமைச்சரான தங்களுக்கும், தமிழக அரசுக்கும், ஆவின் நிறுவனத்திற்கும் பால் முகவர்களாகிய நாங்களும், எங்களதுசங்கமும் எப்போதும் முழு ஒத்துழைப்பு அளிக்க  தயாராகவே இருக்கிறோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்” இவ்வாறு தனது கடிதத்தில் பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.