சென்னை:

சென்னை எழும்பூரில் செயல்பட்டு வரும் அரசு கண் மருத்துவமனை பகுதியில்  மரங்களை வெட்டி புதிய கட்டடம் கட்டுவதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்‍கில், மரங்கை வெட்ட தடை விதித்த நீதிமன்றம், சென்னையை டெல்லியாக மாற்றிவிடாதீர்கள் என்று எச்சரிக்கை செய்துள்ளது.

சென்னை எழும்பூர் கண் மருத்துவமனை வளாகத்தில், நோயாளிகளின் வசதிக்காக 4 ஏக்கர் பரப்பளவில், கூடுதல் கட்டடம் கட்ட திட்டமிடப்பட்டு, அப்பகுதியில் உள்ள 75 மரங்களை வெட்ட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு  உயர்நீதி மன்ற நீதிபதிகள், வினித் கோத்தாரி, ஆர்.சுரேஷ்குமார் அமர்வு முன்பு இன்று  விசாரணைக்‍கு வந்தது.

விசாரணையின்போது, தமிழகஅரசு சார்பில், மருத்துவமனை வளாகத்தில் 25 மரங்கள் மட்டுமே அகற்றப்பட்டு, அவற்றை மாற்று இடத்தில் நட இருப்பதாகவும் தெரிவிக்‍கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனுதாரர் வழக்கறிஞர், பழமையான மரங்களை தற்போதுள்ள இடத்தில் இருந்து அகற்றி வேறொரு இடத்திற்கு மாற்றினால், அவை மீண்டும் துளிர்ப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என  தெரிவிக்‍கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், சென்னையின் இதயம்போல் இருக்கும் பசுமையான காடுகள், கான்கிரீட் காடுகளாக மாறிவருவதால், டெல்லியாக சென்னையை மாற்றி விட வேண்டாம் என அரசுக்கு எச்சரிக்கை செய்தனர்.

மருத்துவமனை வளாகத்தில் உள்ள  மரங்களை வெட்டாமல், வளாகத்தில் உள்ள மாற்று இடத்தில் கூடுதல் கட்டடம் கட்டுவதற்கான சாத்தியக் கூறுகளை கண்டறிந்து, அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டதுடன், வழக்கை நாளை மறுநாளைக்‍கு ஒத்தி வைத்தனர்.