சென்னை: ஒரு தேர்வைக் கூட ஒழுங்காக நடத்த அருகதையற்றவர்கள், மருத்துவக் கல்விக்கு தரம் நிர்ணயிப்பது வேடிக்கையாக உள்ளது என திமுக எம்.பி., கனிமொழி காட்டமாக விமர்சித்துள்ளார்.
நாடு முழுவதும் மருத்துவப்படிப்புக்கான நீட் தேர்வு கொரோனா அச்சுறுத்தலுக்கு  மத்தியிலும் கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி நடைபெற்றது. தேர்வு முடிவுகள்  கடந்த 17ஆம் (அக்டோபர்) தேதி தேசிய தேர்வு முகமை வெளியிட்டது. தேர்வு முடிவுகளில் பல்வேறு குளறுபடிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதையடுத்து, புதிய பட்டியல் வெளியிடப்பட்டது.  அதிலும் பல குளறுபடிகள் இருப்பதாக கல்வியாளர்கள் கண்டனம் தெரிவித்த உள்ளது.

தமிழகத்தில்,  பத்தாவத  மற்றும் 12ஆம் வகுப்பில் பள்ளியளவில் முதலிடம் பெற்ற மாணவர், நீட் தேர்வில் பூஜ்ஜியம்  மதிப்பெண் பெற்றது பெரும் விவாதத்திற்கு உள்ளானது. தேர்வுத்தாள் திருத்தப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. மத்தியஅரசு திட்டமிட்டே தமிழகத்தை வஞ்சித்து வருவதாக குற்றம்சாட்டப்பட்டு உள்ளது.
இந்த சம்பவம் குறித்து  திமுக எம்.பி., கனிமொழி தனது டிவிட்டர் பக்கத்தில் காட்டமாக விமர்சித்து உள்ளார். அதில்,
” 2020 நீட் தேர்வில் நடந்துள்ள குளறுபடிகள் ஒவ்வொன்றாக வெளிவந்துகொண்டிருக்கிறது. பள்ளியில் முதலாவதாக வந்த சென்னையை சேர்ந்த மாணவர் சாய் அக்ஷய், நீட் தேர்வில் வெறும் பூஜ்யம் மதிப்பெண்களை பெற்றுள்ளது எப்படி சாத்தியமாகும் ?
இதே போல கோவை மற்றும் அரியலூரில் குளறுபடிகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. ஒரு தேர்வைக் கூட ஒழுங்காக நடத்த அருகதையற்றவர்கள், மருத்துவக் கல்விக்கு தரம் நிர்ணயிப்பது வேடிக்கையாக உள்ளது” என மிகவும் காட்டமாக கூறியுள்ளார்.
இவர் முன்னதாக, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வில் உள்ஒதுக்கீடு வழங்கும் தமிழ்நாடு அரசின் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் தாமதப்படுத்துவது, மாணவர்களின் எதிர்காலத்தோடு விபரீத விளையாட்டில் ஈடுபடுவதற்கு சமம். ஆளுநர் செய்யும் தாமதம் கூட்டாட்சித் தத்துவத்துக்கே எதிரானது எனக் கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.