இந்தியாவில் பெண் குழந்தைகள் கருவிலேயே அழிக்கப்படுவதை தடுக்க, கருவில் உள்ள குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை கண்டு பிடிக்க மத்திய அரசு தடை விதித்துள்ளது.

இந்த நிலையில் கடலூர் மாவட்டம் நெய்வேலியை சேர்ந்த டாக்டர் ராமச்சந்திரன் என்பவர் தனது தனியார் மருத்துவமனையில், கருவில் உள்ள குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்பதை கண்டறிந்து பெண்களுக்கு கருச்சிதைவு செய்து வந்துள்ளார்.

இது குறித்த வந்த புகாரையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள், டாக்டர் ராமச்சந்திரன் மருத்துவமனையில் சோதனை நடத்தினர்.

அவர் சட்ட விரோதமாக கருச்சிதைவு செய்து வந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

அவர் மீது கடலூர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் டாக்டர் ராமச்சந்திரனுக்கு மூன்று ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்துள்ளது.

– பா. பாரதி